தமிழ்நாட்டில் தற்சமயம் சென்னை , கோவை , மதுரை , திருச்சி , சேலம் , தூத்துக்குடி உள்ளிட்ட  6 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் , இந்திய அரசு வேலூர் , நெய்வேலி , ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மத்திய  அரசின் உதான்  - பிராந்திய இணைப்பு திட்டம் (Regional Connectivity Scheme ) மூலம் புதிய  விமான நிலையங்கள்  அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.




இதில்  வேலூர் மாவட்டத்தில் சிவில் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் , விமான சேவையை தொடங்க மேற்கொண்டு 10 . 72 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு (Airport Authority Of  India ) தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்ட விமான நிலையத்தின் தற்பொழுதுய நிலை குறித்து தெரிந்துகொள்வோம்


விமான நிலைய வரலாறு :




வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சரியாக 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது , அப்துல்லாபுரம் - ஆசனாம்பட்டு சாலை, இங்கு  ஆங்கிலேயர் காலத்தில் இருந்து , 51 ஏக்கர் பரப்பளவில் விமான ஓடுதளம்(Airstrip) இருந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு பிறகு சிறிது காலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த வானூர்தித் தடம் , 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் , 'மதராசு பிளையிங் கிளப்பின்' பயிற்சி விமானிகளுக்காக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது . அடுத்த 5 ஆண்டுகள் மதராசு பிளையிங் கிளப் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வானூர்தி தடம், 2011-ஆம் ஆண்டில் பயன்பாடு ஏதும் இல்லாமல் மீண்டும் கைவிடப்பட்டது .




இந்த நிலையில்தான் கடந்த 2017-ஆம் ஆண்டு , இந்தியா ஒன்றிய அரசின் உதான் (UDAN) - பிராந்திய இணைப்பு  (RCS) திட்டத்தின் கீழ் அப்துல்லாபுரத்தில் இருக்கும் வானூர்தி தடத்தை , 20 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சிறிய வகை விமானங்களுக்கான, விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது . இந்த விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக ,  பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் 60 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டு , வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக , இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு, அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஆங்கிலேயர் காலத்தில் 700 மீட்டர் நீளமுள்ள ஓடுதளப்பாதை தற்பொழுது சிறிய பயணிகள் விமான சேவைக்காக , 850 மீட்டர் ஓடுதளப்பாதையாக  விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது . 
 



மேலும் விமான முனையம் (airport terminal )  , தகவல் கட்டுப்பாட்டு மையம் (Information Control Center), ரேடார் கருவி அமைக்கும் இடம், சரக்கு முனையம் (Freight terminal ) , விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (airtraffic control tower ) உள்ளிட்டவை அமைப்பதற்கான சிவில் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ,  விமான நிலைய  டெர்மினல் கட்டிடம் மற்றும் விமான ஓடுதளப்பாதைக்கு இடையில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான மக்கள் உபயோகப்படுத்தக்கூடிய சாலை இருந்தது . இதில் அரை 775 மீட்டர் சாலையைக் ஓடுதளத்திற்காக கையகப்படுத்துவதில் ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் , எனினும் , மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு , இதற்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது , என்று தெரிவித்தார் .




இது தொடர்பாக பொதுமக்களை தொடர்புகொண்டபொழுது .


இந்த விமான நிலையம் , அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. தார் சாலையை கையகப்படுத்தினால் , அப்துல்லாபுரத்தில் இருந்து ஒடுக்கத்தூர் ஊசூர் , பொய்கைபுத்தூர் , நாட்டார்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்று ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம் , ஆனால் விமான நிலையம் வந்தால் எங்கள் கிராம பகுதிகளும் வளர்ச்சியடையும் என்பதால் , போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் , எனினும் விமான நிலையம் அமைவதில் , எங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சில இழுபறிகள் இருந்து கொண்டுதான் உள்ளது என்று தெரிவித்தனர் .




நிலுவையில் உள்ள பிரச்சனைகள் .


அப்துல்லாபுரத்தில் விமானநிலையம் அமைப்பதில் தொடர்ந்து பொதுமக்களுக்கும் , மாவட்ட நிர்வாகத்துக்கும் இழுபறி நிலவி வருகிறது .


இதுதொடர்பாக வேலூர்  மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி தெரிவிக்கையில் ஆங்கிலேயர் காலத்தில் 51 ஏக்கர் விமான ஓடுதளமாக இருந்த  இடத்தை தற்பொழுது , 47 ஏக்கர் வரை பொதுமக்களின்  நிலங்களை கையகப்படுத்தி  98 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்துள்ளோம் , மேலும் விமானங்கள் டேக் ஆப் , லேண்டிங் செய்வதற்கு , 25 அடி உயரத்திற்கு மேல் உயரமுள்ள  கட்டிடங்கள் , மரங்கள் , மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இடையூறாக இருக்கும் என்பதால் , மேற்கொண்டு 10 .72 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தருமாறு இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு கோரிக்கை வைத்துள்ளனர் , இது தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துகொண்டு இருப்பதாக தெரிவித்தார் .




மேலும் அவர் கூறுகையில்  , முன்னதாக தார்சாலை கையகப்படுத்துவதுற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் அதனை தொடர்ந்து , தரைவழியாக மின்கம்பிகள் இணைப்பு பணிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் நிலத்தில் தரைவழி மின்கம்பி புதைப்பதற்கு , பள்ளம் தோண்ட அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி மின்கம்பிகள் புதைப்பதற்கு சம்மதம் பெற்றுள்ளோம். எனினும் தற்பொழுது  விமான நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கும் இடுகாட்டையும் , விமான நிலைய சுற்று சுவர்களை ஒட்டி அமைந்துள்ள குடிநீர் பைப்லைன் இணைப்புகளையும் மாற்றி அமைப்பதற்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தெரிவித்தார் .




இதுதொடர்பாக  இன்று ABP நாடு செய்திக்குழுமத்திடம் பேசிய வேலூர் விமான நிலைய பொறுப்பு அதிகாரி துரை மேகநாதன்,  ”ஏறக்குறைய 95 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுபெற்று விட்டது , விமானங்கள் லேண்டிங் மட்டும் டேக் ஆப் , செய்ய , பாதுகாப்பு காரணங்கள் கருதி மேலும் 10 .72 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில், அனைத்து பேரா மீட்டர்களையும் பூர்த்திசெய்து  வெகுவிரைவில் வேலூரில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்  . விமானநிலைய பணிகள் முழுவதும் நிறைவு பெற்றபின் முதற்கட்டமாக வேலூரில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானசேவை இயக்கப்படும் என்று தெரிவித்தார் .