திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம் (43). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணை செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த வசீம் அக்ரம் வாணியம்பாடி நகரமன்ற முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில்  செப்டம்பர் 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார். 

 



 

காவல்துறை முதற்கட்ட விசாரணையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சிபி சக்கரவர்த்தி தலைமையில், வாணியம்பாடி நகர ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கஞ்சா கடத்தல், கட்ட பஞ்சாயத்து நடத்திவந்த டீல் இம்தியாஸ் என்பவர் குடோனில் சோதனை நடத்தப்பட்ட சம்பவத்தில் அங்கிருந்து 10 பட்டாக்கத்திகள், 10 கைப்பேசி, 8 கிலோ கஞ்சா ஆகிய பொருட்களை பறிமுதல் செய்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் உட்பட பலர் கைது செய்யப்படாமல் இருந்தனர் . 

 

இந்நிலையில் டீல் இம்தியாஸ் குறித்து காவல்துறைக்கு  ரகசியத் தகவல் கொடுத்தது வசீம் அக்ரம் தான் என்ற சந்தேகத்தில் டீல் இம்தியாஸின் ஆதரவாளர்கள் வசீம் அக்ரமை சாலையில் வழிமறித்து துப்பாக்கியைக் காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்  .

 



 

போலீஸ் அதிகாரிகள் பணிமாற்றம் .

 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தனது உயிருக்கு டீல் இம்தியாசால் அச்சுறுத்தல் உள்ளது எனத் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் , வாணியம்பாடி நகரக் காவல் நிலையம் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகத்திலும் வசீம் அக்ரம் புகார் தெரிவித்திருந்தார் . ஆனால் காவல் துறை அதிகாரிகள் அவரது புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். மேலும் காவல் துறை அதிகாரிகள்  அலட்சியத்தால் தான்  இந்த கொலை நடைபெற்றது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும்  குற்றம்சாட்டி வந்தனர் . இதன் தொடர்ச்சியாக வாணியம்பாடி நகரக் காவல் ஆய்வாளராக பணியாற்றிய கோவிந்தசாமியை தற்காலிக பணியிடை  நீக்கம் செய்தும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் வழங்கப்பட்டது. மேலும்  திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராகப் பதவி வகித்த சிபி சக்ரவர்திக்கு பணி  மாற்றம் அளித்துத் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணனை நியமித்து வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளராக சுரேஷ் பாண்டியன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் .

 



 

மேலும் வசீம் அக்ரம் கொலை வழக்கு மற்றும் டீல் இம்தியாஸ்சின் கஞ்சா வழக்குகளை விசாரிக்க வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த நாகராஜனை  நியமிக்கப்பட்டுள்ளார். இவரை வாணியம்பாடி நகர ஆய்வாளராகவும் நியமித்து வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார். ஆய்வாளர் நாகராஜனுக்குப் பதில் வாணியம்பாடி தாலுகா ஆய்வாளராகத் திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் பழனிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய குற்றவாளி உட்பட 7 பேர் சரண் . 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம்
  கொலை வழக்கில் அன்றிரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை வாகன சோதனையின் போது  ஓட்டேரி வண்டலூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி மற்றும் டெல்லி குமார் ஆகியோரை காவல்துறை கைது செய்தனர். மேலும் காவல்துறை விசாரணையில் பிரபல கஞ்சா வியாபாரி டில்  இம்தியாஸ்  குறித்து காவல்துறைக்குத் துப்பு கொடுத்தால் வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது இதையடுத்து காவல்துறையினர்  கொலையில் முக்கிய குற்றவாளிகளான டிரைவர் உட்பட மேலும் 10 பேரை தேட தொடங்கினர் .

 



 

இந்நிலையில் வசீம் அக்ரம் கொலை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின், முனீஸ்வரன் ஓட்டேரி வண்டலூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார்,  அஜய், செல்வா என்கிற செல்வகுமார் ஊரப்பாக்கம் வண்டலூரைச் சேர்ந்த சத்தியசீலன் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் ஜேஎம் மூன்றாவது நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர் உதவியுடன் நீதிபதி பாரதி முன்பு சரணடைந்தனர் இதையடுத்து அவர்களை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் தொடர்ந்து அவர்கள் கோவை நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டனர் .

 

அதேபோல் முக்கிய குற்றவாளியான  டீல் இம்தியாஸ் நேற்று சிவகாசி ஜேஎம் ஒன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். டீல் இம்தியாசை வரும் 21ஆம் தேதி  வாணியம்பாடி நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு நீதிபதி ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களை போலீஸ் காவலில்  எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளனர் . இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.