திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வரவேற்றார். கூட்டத்தில் பொதுப்பணித்துைற அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், கிரிவலப் பாதையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், தமிழக அரசு தெரிவிக்கும் மஞ்சள்பையை பயன்படுத்த வேண்டும். பக்தர்கள் கிரிவலப் பாதையில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதால் திருவண்ணாமலை நகரத்திற்கு புகழ் சேர்கிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகள், பொதுமக்கள் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.


 






நடைபாதையில் சாமியார்கள் தங்குவதற்கும், நடைபாதையில் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வதற்கும் அனுமதிக்க கூடாது. சாமியார்களுக்கு தங்குவதற்கான தனியான இடம் ஏற்படுத்தப்பட்டு அங்கு அவர்களை தங்க வைக்க வேண்டும். கிரிவலப்பாதை நடைபாதையில் சாமியார்கள் தற்காலிக குடில் அமைக்க கூடாது. கிரிவலப்பாதையில் உள்ள சாமியார்களை முறைப்படுத்த காவல்துறை மூலம் கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிரிவலப் பாதையில் உள்ள மின்விளக்கு வசதிகளை அண்ணாமலையார் கோயில் சார்பில் கண்காணித்து கிரிவலப் பாதை இருள் சூழாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிரிவலப் பாதையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கிரிவலப் பாதையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதையும், அன்னதானம் வழங்கப்படுவதையும் உணவு பாதுகாப்பு த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


 




 


கிரிவலப்பாதையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு 100 சதவீதம் இல்லாத அளவிற்கு கண்காணிக்க வேண்டும். கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரிப்பதற்காக வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் கிரிவலப்பாதையை தொடர்ந்து கண்காணிக்காக வேண்டும். மேலும் ராஜகோபுரம் முன்பு இருந்து அகற்றப்பட்ட தேங்காய், பூ கடைகளை மீண்டும் நடத்த வியாபாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தற்காலிக இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டின் 365 நாட்களும் பக்தர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி ஆன்மிக சிந்தனையோடு கிரிவலம் வருவதற்கு உண்டான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, துணை கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.