வேலூர் மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் அவர்கள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியின் காவல் துணை ஆணையராக இருந்த ராஜேஷ் கண்ணன் வேலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பு ஏற்று கொண்டார்.




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இதற்கு முன்பு இருந்த காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் வேலூர் மாவட்டத்தில் ரௌடிசத்தை குறைக்க சிறப்பான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அந்த நடவடிக்கைகள் மேலும் தொடரும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை களைவதிலும் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதே சமயம் காவலர்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தப்படும். மாநில காவல் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காவலர்கள் நலத்திட்ட முயற்சிகள் சிறந்த முறையில் இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும்.


வேலூர் மாநகர பகுதிகளில் போக்குவரத்தில் பிரச்சனைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகத்தால் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதிகளில் போக்குவரத்து சிக்கல் இருந்து வருகிறது. இதனை குறைக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் இளம் சிறார்கள் பலரும் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி, நான் இதற்கு முன்பு பணிபுரிந்த சென்னை புளியந்தோப்பு பகுதியிலும் இதே போன்ற சிறார் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் பிரச்சனை இருந்தது. கிட்டத்தட்ட 600 பேர் குற்றப்பின்னணி உடையவர்களாக இருந்தனர் அவர்களில் பலரும் இளம் சிறார்களாக இருந்தனர். இவர்களைப் போன்றவர்களை கண்டறிந்து 18 வயதிற்குள் இருக்கக்கூடிய இவர்கள் என்ன காரணங்களுக்காக, எந்த சூழலில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்தினோம்.



பலரை அதில் இருந்து மீட்டெடுத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்த்தோம். மேலும் கல்வி படிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு அரசால் நடத்தப்படுகின்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் உள்ள சிறிய அளவிலான பணிகளை மேற்கொள்ள வைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தோம். இவற்றை வேலூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்த உள்ளோம் என்றார். பின்னர் நிர்வாக நடைமுறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார் எஸ்.பி ராஜேஷ் கண்ணன். பின்னர் மாவட்டத்தில் உள்ள எடிஎஸ்பி ஆல்பர்ட் ஜான், டிஎஸ்பிக்கல், காவல் ஆய்வாளர்கள் மற்றும் இதர காவலர்கள் புதிய எஸ்.பிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.  வேலூர் மாவட்டத்தில் அண்மை காலங்களாக அதிகரித்துள்ள தொடர் கொலை, குற்றச்சம்பவங்கள் புதியதாக பொறுப்பெற்றுள்ள எஸ்.பி ராஜேஷ் கண்ணனுக்கு சாவாலாக அமைந்துள்ளது.