திருவண்ணாமலை (Tiruvannamalai News) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பெரிய சாயக்கார தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது (50), இவர் சலவை தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ்குமார், ஜெயக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளார்.


மதுப்பழக்கத்திற்கு அடிமை:


இந்நிலையில் பிரகாஷ் தினந்தோறும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் பிரகாஷிற்க்கும் அவருடைய மனைவி சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு அவர்கள் வெளியே சென்றனர். தற்போது மனைவி சரஸ்வதி, மகன் ஜெயக்குமார் சென்னையில் வசித்து வருகின்றனர். பிரகாசுடன் மற்றொரு மகன் சுரேஷ்குமார் மட்டும் வசித்து வருகிறார்.


மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் பிரகாஷ் மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். மேலும் பிரகாஷ் துணி இஸ்திரி செய்யும் தொழில் செய்து வருவதாகவும் வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆரணி மையப்பகுதி காந்தி சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் குடிப்பது வழக்கமாகவும் கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் அதிகளவில் மதுகுடித்துவிட்டு தள்ளாடிபடியே அரசு டாஸ்மாக் கடை அருகில் உள்ள கடை வளாகத்தில் உறங்கிவிட்டதாக தெரிகின்றன.


 






கட்டிங் சரக்கு வாங்கி தரமறுத்த நண்பன் கொலை 


அப்போது அங்கு வந்த சேத்பட் வட்டம் கனகம்பட்டு கிராமத்தை சேர்ந்த முனியன் தென்றல் அரசு (வயது 40) என்பவர் தனது நண்பனான பிரகாஷிடம் கட்டிங் சரக்கு வாங்கி தர தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சரக்கு வாங்கி தர பிரகாஷ் மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த தென்றல் அரசு, கல்லால் பிரகாஷை தாக்கியதில் பிரகாஷ் சம்பவடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் தென்றல் அரசு அந்த இடத்திலிருந்த தப்பியோடிவிட்டார்.


நண்பன் கைது:


இதனையடுத்து காலையில் பஜார் வீதியில் பொதுமக்கள் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் இறந்துள்ளதை பார்த்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த பிரகாஷின் மகள் பிரியங்கா கொடுத்த புகாரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யபட்டு பின்னர் ஆரணி நகர துணை ஆய்வாளர் சுந்தரேசன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து தலைமறைவான முனியனை ஆரணி டவுன் வ.ஊ.சி தெரு பகுதியில் பதுங்கி இருந்த குடிமகன் தென்றல் அரசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


 




டாஸ்மார்க் கடையை அகற்றுகோடி வியாபார சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்  


பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.‌ இச்சம்பவம் ஆரணி வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் வியாபார சங்க தலைவர் எஸ்.டி.செல்வம் தலைமையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி டாஸ்மாக் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரனிடம் டாஸ்மாக் கடை மாற்ற கோரிக்கை மனு அளித்தனர். ஏற்கனவே பஜார் வீதியில் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதாகவும் தற்போது கொலை சம்பவம் நடந்தேறி உள்ளதால் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.