'சமூக நீதியையும் சமத்துவத்தையும் வளர்ப்பதற்காக இலவசங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் இதை பலர் கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள்' என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021 -22 ஆம் கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா இன்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இதில் 148 அரசு பள்ளிகள் 19 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 167 பள்ளிகளை சேர்ந்த 12,665 மாணவர்கள், 13,066 மாணவிகள் என 25 ஆயிரத்து 731 மாணவர்களுக்கும், 503 உலமாக்களுக்கும் என 26,234 பயனாளிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.


 




 


தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர், “உலகில் 2 புனிதமான இடங்கள் உள்ளது. அதில் ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் உயிர் கொடுக்கப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் கொடுக்கப்படுவது இலவசம் இல்லை சமூக நீதியை உருவாக்குவதற்காக இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் அரசின் உதவி. இலவசங்களை சிலர் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். அனைவரையும் வளர்ச்சி பாதையில் கொண்டு வந்து ஒரே இடத்திற்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டு தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது. சமூகநீதியும், சமத்துவமும் வளர்ப்பதற்கு தான் இலவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை குடும்பத்தினர் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்.


 




 


பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்காக மிகவும் பாடுபட்டவர்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர். அவர்களின் பெரும் முயற்சியால் இன்று பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்குகின்றனர். உயர் பதவிகளை வகிக்கின்றனர். எனக்கு இரண்டும் ஆண்பிள்ளைகளே பிறந்துள்ளது. எனக்கு பெண்பிள்ளை இல்லையே என்று பலநாட்கள் ஏங்கியுள்ளேன். அதனால் தான் திருவண்ணாமலைக்கு மகளிர் கல்லூரி கொண்டு வந்தேன்” என்றார். 


மேலும், 2014 மற்றும் 2018-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கும் மற்றும் சத்துணவு மையத்தில் பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கும் கருணை அடிப்படையில் சத்துணவு மையத்தில் பணி நியமன ஆணை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர், சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பே.கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.