தன்னுடன் உறவில் இருந்த பெண்ணை மிரட்ட தற்கொலை செய்ய முயல்வது போல் நடித்த இசைக்கச்சேரி பாடகர் பரிதாபகரமாக தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (42). இவர் இசைக்கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார்.


இசைக்குழு பெண்ணுடன் உறவு


இவருக்கு திருமணமாகி (மனைவி மேரி) 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் இவர் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் பொன்னை பகுதியிலேயே வீட்டுக்குத் தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.




இச்சூழலில் முன்னதாக திருமணம் மீறிய உறவில் இருந்த சித்ராவுக்கும் ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 


இந்நிலையில், சித்ராவை பயமுறுத்துவதற்காக இவர்கள் தங்கியிருந்த வீட்டின் ஒரு அறையில் தூக்கு மாட்டி ராஜா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை தன் செல்போன் மூலம் வீடியோவும் எடுத்துள்ளார்


இந்நிலையில், எதிர்பாராதவிதமாக ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 
தொடர்ந்து தாமதாக வந்து ராஜாவைப் பார்த்த சித்ரா அதிர்ச்சியடைந்து கதறியழுதுள்ளார். 


இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னை காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும், இவர் தற்கொலை செய்து கொள்ளும் பதைபதைக்க வைக்கும் காட்சியும் முன்னதாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை சம்பவம்


முன்னதாக சென்னையைச் சேர்ந்த பெண் தன்னுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த நபர் பேசாததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேதவல்லி எனும் இப்பெண் வியாசர்பாடி, சாமியார் தோட்டம் பகுதியில் வசித்து வந்த நிலையில், “என் சாவுக்கு என்னுடன் வேலை பார்த்து வந்த தரணிராஜன் என்பவர்தான் காரணம்” என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தார்.


அந்தக் கடிதத்தில், “என்னுடன் அன்பாக பேசி பழகி வரும் எனது கணவருக்கு துரோகம் செய்துவிட்டேன். எனக்கு பிறந்த இரண்டாவது குழந்தை எனது கணவருக்கு பிறக்கவில்லை. என் சாவுக்கு காரணமான தரணிராஜனை விட்டுவிடாதீர்கள்” என்று எழுதியுள்ளார்.  


தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வேதவல்லி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் தரணிராஜனும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வேதவல்லியுடன் தரணிராஜன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தரணிராஜன் பேசாமல் போனதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான வேதவல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 


தொடர்ந்து காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் தரணிராஜன் குழந்தை தன்னுடையது அல்ல என்று கூறிவருவதால், இந்த வழக்கில் பரபரப்பு நீடித்து வருகிறது.





மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060