வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒருங்கிணைத்த வேலூர் மாவட்டத்தின் மற்றுமொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை .

 

தமிழ் நாட்டில்
  புதியதாக  உருவாக்கப்பட்ட  9 மாவட்டங்களில் ஊரக தேர்தலை நடத்த அறிவிப்பு விரைவில் தமிழ் நாடு அரசு தேர்தல் துறையால் வெளியாகவுள்ளது . அதற்காக முதற்கட்டமாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், காட்பாடி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிக்கான  வார்டு வாரியாக, புகைப்படத்துடன் கூடிய வரைவு  வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று வேலூர்  மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வெளியிட்டார்.



 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்  வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்கள், 2079 கிராம ஊராட்சி வார்டுகளும், 7 ஊராட்சி ஒன்றியங்களில் 138 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வார்டுகள் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. சட்டமன்றத் தொகுதிவாரியான வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.



 

மொத்தம் வேலூர் மாவட்டத்தில் 1331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து, 48 ஆயிரத்து, 898 பேர், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து, 68 ஆயிரத்து 6 பேர், மூன்றாம் பாலினத்தவர் 80 ஆக மொத்தம் 7 லட்சத்து, 16 ஆயிரத்து, 984 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்காக வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுக்கா அலுவலகம் ஆகிய இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவித்தார். இது போலவே இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று  வெளியிட்டார்  அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 288 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 1410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.



 

 

இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம் , நெமிலி . சோளிங்கர் , திமிறி மற்றும் வாலாஜா ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 701  ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 40 ஆயிரத்து 498 பெண் வாக்காளர்களும் மற்றும் 38 இதர பாலினத்தவர் என மொத்தம் 6 லட்சத்து 67 ஆயிரத்து 237 வாக்காளர்கள் , வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள  நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.