திருவண்ணாமலையில் 1300 ஆண்டுகள் பழமையான லகுலீசர், பிள்ளையார் சிற்பங்கள் கண்டுபிடிப்பு...!

தமிழகத்தில் பாசுபதம் பல்லவர்கள் காலத்தில் சிறப்புற்று இருந்தது. இதுவரை சுமார் 30க்கும் குறைவான லகுலீசர் சிற்பங்களே கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெரும்பாலானவை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவை

Continues below advertisement

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் வந்தவாசி அடுத்த தெள்ளாறு பகுதியில்  ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது  மாம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் ஒரு மாமரத்தின் அடியில் சதுர ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும் அதனருகே இரண்டு பலகை சிற்பங்களும் இருப்பது கண்டறிந்தனர். அந்த கற்சிற்பங்களை ஆராய்ந்தபோது அவை பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் மற்றும் பிள்ளையார் சிற்பம் என்பது கண்டறியப்பட்டது.

Continues below advertisement

இந்த சிற்பங்கள் குறித்து பேசிய திருவண்ணாமலை மரபுசார் அமைப்பை சேர்ந்த பன்னீர் செல்வத்திடம் பேசினோம்...

நாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் பலபகுதியில் கல் சிற்பங்கள் மற்றும் நடுக்கல் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து வருகின்றோம். மாம்பாக்கம் கிராமத்தில் சாலை ஓரத்தில் உள்ள லகுலீர் சிலை மற்றும் பிள்ளையார் சிலை கண்டு அதனுடைய காலத்தை அறிய அந்த சிலைகளை ஆய்வு செய்தோம்


 

லகுலீசர் சிலை பற்றிய சிறப்பு அம்சங்கள்:

சைவப்பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தைத் தோற்றுவித்தவர் லகுலீசர். இன்றைய குஜராத் மாநிலத்தில் உள்ள காயரோஹனகத்தில்தான் பாசுபதத்தை லகுலீசர் தோற்றுவித்தார். தனது சீடர்கள் மூலம் பாசுபதத்தை இந்தியா முழுவதும் பரப்பவும் முயற்சிகள் மேற்கொண்டார். கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழக நிலப்பரப்பில் பாசுபதம் வளர்ச்சியுற்று பல்லவர்கள் காலத்தில் சிறப்புற்று இருந்தது. இதுவரை சுமார் முப்பதுக்கும் குறைவான லகுலீசர் சிற்பங்களே தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெரும்பாலானவை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதற்கு முன் இரண்டு லகுலீசர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மாம்பாக்கத்தில் மூன்றாவதாக லகுலீசர் சிலை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் மூன்றடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட கற்பலகையில் புடைப்பு சிற்பமாக லகுலீசர் வடிக்கப்பட்டுள்ளார்.

இவரின் தலையை முடிச்சுடன் கூடிய அழகான ஜடாபாரம் அலங்கரிக்க இரு செவிகளிலும் பத்ர குண்டலமும், பெரிய விழிகளும் தடித்த உதட்டும் கொண்டு நீள்வட்டமுகம், லேசாகச் சாய்த்தவாறு அமைந்துள்ளது. இவரின் வலது கையில் அவரது ஆயுதமான தடி போன்ற லாங்குலத்தை கடக முத்திரையில் தாங்கி நிற்க, இடது கையை கடி முத்திரையில் இடையின் மீது வைத்துள்ளார். லாங்குலத்தின் அடிப்பகுதி மெல்லியதாகவும் அதன் மேல்பகுதி பருமனாகவும் காட்சி தருகிறது. வழக்கமாகத் தண்டத்துடனோ இல்லை தனியாகவோ காட்சிப்படுத்தப்படும் நாகம் இச்சிலையில் காணப்படவில்லை.

 


 

கழுத்தில் அணிகலனாக சரபளியும், வயிற்றில் உதரபந்தமும் கொண்டு இடை ஆடையுடன் பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இச்சிற்ப அமைதியை வைத்து இது ஏழாம் நூற்றாண்டின் கடைபகுதி அல்லது 8ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலமாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது என்றார். 

பிள்ளையார் சிலையின் வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள்:-

மூன்றடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட கற்பலகையில் நான்கு கரங்களுடன் பிள்ளையார் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். மகுடம் அலங்கரிக்கத் தனது மேல் வலது கரத்தில் நெற்பயிரையும் மேல் இடது கரத்தில் அக்கமாலையுடன் கீழ் வலது மற்றும் இடது கரத்தை தன் தொடையின் மீது வைத்தவாறு இரண்டு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். யானையின் காது போன்றே பெரிய காது மடல்களுடன் கூடிய பருத்த முகத்திலிருந்து கீழ் நோக்கி இடப் பக்கம் சுருளும் துதிக்கையுடன் இடம்புரி பிள்ளையாராக கம்பீரத்துடன் காட்சி தருகிறார். 

மேலும் தும்பிக்கையின் வலப்பக்கம் கூறிய தந்தமும், இடப்பக்கம் சிறிய தந்தமும் தோளின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகச் சரியும் பட்டையான முப்புரி நூலும் இருக்கைகளிலும் தோள்வளையும், இடையில் உதரபந்தமும் அணிந்து அழகுறக் காட்சி தருகிறார். வளமையின் குறியீடாகச் சொல்லப்படும் நெற்பயிரை ஆயுதமாகக் கொண்டு இதுவரை வெகு சில பிள்ளையார்களே கண்டறியப்பட்டுள்ளது. இதன் சிற்ப அமைப்பை கொண்டு இதன் காலமும் மேலே குறிப்பிட்ட லகுலீசரின் காலமே ஆகும்.

 

இதுவரை லகுலீசர் கண்டறியப்பட்ட இடங்களில் பெரும்பாலும் இதே போன்று பிள்ளையாரும் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதகுந்தது. இவ்விறு சிற்பங்களுடன் இரண்டடி சதுர ஆவுடையுடன் இதே காலத்தைச் சேர்ந்த ஒரு சிவலிங்கமும் காணக்கிடைக்கிறது.

இம்மூன்று சிற்பங்களையும் வைத்துப் பார்க்கையில் இவ்விடத்தில் 7ஆம் நூற்றாண்டு வாக்கில் பல்லவர் காலத்திய சிவாலயம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. கால ஓட்டத்தில் கோயில் அழிந்து இம்மூன்று சிற்பங்கள் மட்டும் காலத்தின் சாட்சியாக எஞ்சி நின்று நமக்கு இவ்விடத்தின் தொன்மையை உணர்த்துகிறது. இவ்வளவு தொன்மை வாய்ந்த அரிய சிற்பங்களை மக்கள் முறையாகப் பாதுகாத்து, சிறப்பான வழிபாடுகள் செய்திடுவதே இறைவனுக்கும் இச்சிற்பங்களைச் செய்த சிற்பிக்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாக இருக்கும். 

Continues below advertisement
Sponsored Links by Taboola