வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் 84 மேல்நிலைப் பள்ளிகள் பயிலும் 4,011 மாணவர்கள், 5,842 மாணவிகள் என மொத்தம் ஒன்பதாயிரத்து 853 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை காட்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து மணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். திருவலம் பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆளுநர் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது குறித்து கேட்டதற்கு, “எங்கள் முதலமைச்சர் ஆளுநர் குறித்து என்ன பேசுகிறாரோ அதையே தான் நாங்களும் கூறுகிறோம்” என்றார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணி தான் தீர்மானிக்கும் என, டிடிவி தினகரன் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, பதில் அளிக்காமல் காதை மூடிக்கொண்டு சிரித்துகொண்டே அமைச்சர் துரைமுருகன் சென்றார்.


 




இதற்கு முன்னதாக, சென்னையில் நடைபெறும் 7-வது ஆசிய ஆக்கி ஆடவர் சேம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை வேலூர் வந்து அடைந்தது. இதனை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுமக்களுக்கும். விளையாட்டு வீர்களுக்கும் வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் மேடையில் அவர் ஆக்கி விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டு போட்டி, இந்தியாவில் முதல் இடத்தில் இருந்தது. இப்போது அந்த இடத்தை கிரிக்கெட் விளையாட்டு பிடித்து விட்டது ஹாக்கி நான்காவது இடத்திற்கு வந்துவிட்டது. தமிழக அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது.


 




எனவே மாணவ மாணவிகள் கல்வியோடு விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி விளையாட வேண்டும். இதனால் உடலும் உள்ளமும் உற்ற உணர்வு அடையும் மேலும் ஆயுட்காலமும் நீட்டிக்கும்.விளையாட்டுத்துறையில் தமிழகம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடை மடை பகுதிகளுக்கும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது வந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.