தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தருமபுரி தகடூர் புத்தகப்பேரவை என்ற அமைப்பு பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை முதல் 04.07.2022 திங்கட்கிழமை வரை 11 நாட்களுக்கு மாபெரும் புத்தகத் திருவிழா நடத்த உள்ளது. இதனை நினைவு கூறும் வகையிலும், அனைத்து மாணவ, மாணவியர்களும் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் மாபெரும் வாசிப்பு திருவிழா தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றது.

 

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  ‘கைப்பேசியை விடு புத்தகத்தை எடு’ என்ற தலைப்பில், தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழாவினை தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  மாவட்ட  ஆட்சித்தலைவர் கி.சாந்தி  2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடாமியின் பால புரஸ்கார் விருது பெற்ற  ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நூலினை மாணவியர்களுக்கு இன்று வழங்கி, இந்த புத்தகத்தினை வாசித்து தருமபுரி வாசிக்கிறது என்னும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். 



 

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட  ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட 1610-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1.87 இலட்சம் மாணவ, மாணவியர்கள்  இன்று நடைபெற்ற தருமபுரி வாசிக்கிறது என்னும் வாசிப்பு திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகத்தினை வாசித்து மகிழ்ந்தனர். மேலும், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழாவில் 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடாமியின் பால புரஸ்கார் விருது பெற்ற மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூல் 2000 மாணவியர்களுக்கு இலவசமாக  வழங்கப்பட்டுள்ளன.



 

இங்கு படிக்கும் மாணவியர்கள் மட்டுமல்லாமது தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள மாணவ, மாணவியர்கள் சிறந்த கல்வியை கற்று, சிறப்பான உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும். அவ்வாறு உயர்ந்த கல்வியை கற்று, உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற தன்னம்பிக்கையினை பள்ளிகளில் படிக்கும் பருவத்திலேயே நீங்கள் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இளமையில் கற்ற கல்வி எப்பொழுதும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இங்கு படிக்கும் மாணவிகள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளான இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட ஏராளமான உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும். அந்த பதவிகளில் இருக்கும் பொழுது இது நான் படித்த பள்ளி என்ற பெருமை கொள்ளும் அளவிற்கு உங்கள் கல்வி தற்பொழுது கற்கும் கல்வி சிறந்த கல்வியாக அமைய வேண்டும். சிறந்த கல்வியை கற்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் மேல் நிலையைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், தகடூர்  புத்தக பேரவையினர் உள்ளிட்ட ஏரிளமானோர் கலந்து கொண்டனர்.