காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளின் நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கர்நாடக அணைகள் இரண்டும் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி வரை நீர்வரத்து இருந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை குறைந்து வந்ததால் நீர் திறப்பு என்பது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லை என பிடிக்குகளுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்து வந்தது. இந்நிலையில் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

 

கடந்த ஒரு வார காலமாக தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு பத்தாயிரம் கன அடியிலிருந்து 15,000 கனியாக அதிகரித்தது. மேலும் நேற்று காலை வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை படிப்படியாக உயர்ந்து 30 ஆயிரம் கன அடியாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கனவே வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யும் வகையில் ஓகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்க மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மீண்டும் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடைவித்துள்ளது. ஏற்கனவே 48 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. மேலும் தற்பொழுது காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரி ஆற்றங்கரை உள்ள பகுதிகளில் ஆற்றில் குளிக்கவும், இறங்குவும் வேண்டாம் என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றங்கரையோம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.