திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.முருகன் வயது ( 45). இவர் சாத்தனூர் கிராமத்தில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். இவருக்கு திருமணம் ஆகி பிரபாவதி என்ற மனைவியும், 9-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்களும், 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் முருகனின் சொந்த நிலத்தில் வேலை செய்வதற்கு கூலி ஆட்கள் தேவைப்பட்டது. இதனால் முருகன் தன்னுடைய கிராமத்தில் வேலையாட்களை கூப்பிட்டுள்ளார். ஆனால் அங்கு யாரும் வராததால் அருகில் உள்ள கிராமத்திற்கு முருகன் சென்று தன்னுடைய விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக ஆட்களை தேர்வு செய்துவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.


 




அப்போது புளியந்தோப்பு என்ற இடத்தின் அருகே முருகன் வந்த போது தண்டராம்பட்டில் இருந்து செங்கம் நோக்கி எதிரே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று திடீரென முருகன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிபயங்கர சத்துடன் மோதியது. இதில் கீழே விழுந்த முருகன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதனைத்தொடர்ந்து விபத்து நடந்த உடனே சொகுசு காரின் ஓட்டுநர் மற்றும் உடன் வந்தவர்கள் அனைவரும் காரை அங்கேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தும் கேட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது காரில் அடிப்பட்டு முருகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக சாத்தனூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர். 


 




மேலும் இதுதொடர்பாக சாத்தனூர் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர். இறந்த அ.தி.மு.க. கவுன்சிலர் முருகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புளியந்தோப்பு சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறுது. இதனால் அங்கு நெடுஞ்சாலை துறையின் வேகத்தடை அமைத்தால் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.


உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.