திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கு வருகை தந்த அக்குழுவின் உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான வேல்முருகன் பேட்டியளித்தார். அப்போது தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு சுங்கச்சாவடிகள் அமைத்து இரவு பகலாக கொள்ளை அடித்து வருவதாகவும், இதை எதிர்த்து தாம் தொடர்ந்து போராடி வருவதாகவும், தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலையை அடுத்து தற்போது மாவட்டங்களுக்கு உள்ளே பிற மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் ஒன்றிய அரசு வசூல் வேட்டையை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது திருவண்ணாமலை-வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கடலூர்-விருத்தாச்சலம் ஆகிய இடங்களில், தற்போது சுங்கச்சாவடியை அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் இருந்த 3 சுங்கச்சாவடிகளை தமிழக முதல்வரின் அழுத்தத்தால் எடுக்கப்பட்டிருப்பதை தான் வரவேற்பதாகவும் கூறிய அவர், பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றிய அரசு சுங்கச்சாவடிகளை அமைத்து பொதுமக்களிடம் வசூல் கொள்ளையடிப்பதை ஏற்க முடியாது என்றும், இதனை உடனடியாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


 




 


தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் 10 முதல் 30 சதவீத கட்டணம் ஏற்ற இருப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாதென்றும், சுங்கச்சாவடிகளால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபட சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்றிவிட்டு வேறுவிதமாக வசூலிக்க மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகம் முயல்வதாக இன்று செய்திகள் வெளிவந்துள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்றும், வாகனம் வாங்கும் போதே அனைத்து வரிகளையும் தாங்கள் முழுமையாக செலுத்தி விடுவதாகவும், இருந்த போதிலும் வெள்ளையன் போய் கொள்ளையன் வந்தது போல் சுங்கச்சாவடி மூலமாக வசூலிப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலை ஒன்றிய அரசு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஒன்றிய அரசு எதைக் கேட்டாலும் தருவதில்லை என கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கின்ற அரசாகவும், மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் அடிமை அரசாக நடத்துவதற்கான வேலைகளை தான் பிரதமர் செய்து வருகிறார் என்றும், இது மாநில உரிமைகளை பறிக்கின்ற செயல் மட்டுமல்ல என்றும், தேசிய இனங்களை அவமதிக்கும் செயலாகவும் தாங்கள் கருதுவதாகவும் கூறினார்.


 




 


 ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதாமல் அனைத்து மாநிலங்களையும் தன்னகத்தே வைத்துக் கொள்ள முயற்சிப்பது என்பது இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், சமநீதிக்கும், சமூக நீதிக்கும் வேட்டு வைக்கின்ற செயல் என்றும் விமர்சித்த அவர், இதனை பாஜக தலைவர் செய்யக்கூடாதென்றும் பாஜக அரசு ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை வாக்காளர் அட்டை, ஒற்றை குடும்ப அட்டை போன்று கொண்டு வருவது என்பது அந்தந்த மாநில மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் செயல் என்றும் அவர் சாடினார். பல்வேறு மாநில அரசுளை பாஜக அரசு காலில் போட்டு மிதித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு குறுக்கு வழியை கையாள்வதாகவும் இது வரும் காலங்களில் மக்களிடம் பெரும் எழுச்சி அல்லது புரட்சியை ஏற்படுத்தும் ஆகையால் பாஜக இதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.