திருவண்ணாமலை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொிவித்து உள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை, சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, சென்டர் பார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது வளர்ந்த நாடுகளில் டிரோன் தொழில் நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் டிரோன் மூலம் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சி கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும்.


 




 


இதில் ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய்15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மேலும் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து தான் இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த பயிற்ச்சியை  பெற 18 முதல் 45 வயது உடையவர்கள் ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின மாணவர்களும், கல்வித் தகுதியில் 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் அளிக்கப்படும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூபாய் 61 ஆயிரத்து 100 தாட்கோவால் வழங்கப்படும்.


 




இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள். மேலும் இந்த உரிமை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இப்பயிற்சியினை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம். உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய டிரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவும் இத்துறையால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.