கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை,  கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு  கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு மழையின்றி வறண்டு காணப்பட்டது.

 

தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைகள் நிரம்பி வழிந்தோடுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  நீர்வரத்து வினாடிக்கு சுமார் 8000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர்  தென்பெண்ணையாற்றில்  திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக  கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
  



 

இந்நிலையில் தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அணைக்கட்டு நிரம்பி, தண்ணீர் வழிந்தோடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக  ஆற்றில் தண்ணீர் செல்வதால், நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட  பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவே, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஈச்சம்பாடி அருகே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆண்டுக்கு மூன்று முறை இது போன்ற வெள்ளப்பருக்கு ஏற்பட்டு வருவதால், ஈச்சம்பாடியில் அணைக்கட்டில் இருந்து நீரேற்று மூலம் தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள உள்ள 64 ஏரிகள் மற்றும் வாணியாறு அணைக்கு தண்ணீர் நிரப்பி, விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வழங்க, கடந்த அதிமுக ஆட்சியில் 338 கோடி ரூபாய் மதிப்பில் தென்பெண்ணை ஆறு உபரி நீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கடலுக்கு செல்கிறது. எனவே இந்த தென்பெண்ணை ஆறு உபரி நீர் திட்டத்தை கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் இருந்து நீரேற்றம் செய்து ஏரிகளில் நிரப்புவதற்கு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.