கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக கடந்த திங்கட்கிழமை  தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே திட்டமிட்டபடி செப்டம்பர் முதலாம் தேதி  முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.



வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் என 281 பள்ளிகள் உள்ளன. இதில் 9 ஆம் வகுப்பில் 21,039 பேரும், 10ஆம் வகுப்பில் 20,516 பேரும், 11ஆம் வகுப்பில் 16,588 பேரும், 12-ம் வகுப்பில் 17,607 பேரும் என மொத்தம் 75,750 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு வருபவர்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல் கண்டறியப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.



மேலும், மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி விவரப்படி பள்ளிகளில் பணியாற்றி வரும் 6,324 ஆசிரியர்களில் 5,070 ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதையடுத்து பலர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். மாவட்டத்தில் 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதேபோல  1,592 ஆசிரியர் அல்லாத ஊழியர்களில் 1,169 ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குத் தடுப்பூசி போட அறிவுறுத்தப் பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் ஏற்கனவே இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் முழு அளவில் இயக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



மேலும் அரசு கிராமப்புற பேருந்துகள் பள்ளி நேரங்களில் நேரம் தவறாமல் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் அரசு  பேருந்துகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 222 அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும். அரசு பேருந்துகளில் மாணவ மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.



வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் உள்ளது. இங்கு 27 அரசு கலைக்கல்லூரிகள், 12 அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் 116 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகிறது. கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .