வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்:


கடந்த சில நாட்களில் டிவிட்டரில் பல்வேறு கொள்கை மாற்றங்களைச் செய்த பிறகு, அதன் உரிமையாளர் எலான் மஸ்க், "நான் ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?" என கேட்டு ஒரு வாக்கெடுப்பை தொடங்கினார். தொடர்ந்து வெளியான மற்றொரு டிவிட்டர் பதிவில்,  "முன்னோக்கிச் செல்லும்போது, ​​முக்கியமான கொள்கை மாற்றங்களுக்கான வாக்கெடுப்பு இருக்கும். மன்னிக்கவும். மீண்டும் நடக்காது," என குறிப்பிட்டு இருந்தார். கடைசியாக வெளியான டிவீட்டில், "நீங்கள் விரும்புவதைக் கூறுகையில் கவனமாக இருங்கள், அது கிடைக்கக்கூடும்" என எலான் மஸ்க் குறிப்பிட்டு இருந்தார்.






பதவியில் இருந்து விலக வலியுறுத்திய பயனாளர்கள்:


அந்த வாக்கெடுப்பில் 1 கோடியே 75 லட்சத்து 2,391 பேர் தங்களது கருத்தை தெரிவித்து இருந்தனர். அதில், 57.5 சதவிகிதம் பேர் டிவிட்டர் நிறுவன தலைமை பதவியில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் எனவும், 42.5 சதவிகிதம் பேர் அப்பதவியில் எலான் மஸ்க் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக  உண்மையிலேயே, எலான் மஸ்க் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


புதிய விதிமுறை காரணமா?


Facebook, Instagram மற்றும் Mastodon உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களில் உள்ள கணக்குகளை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படும் ட்விட்டர் கணக்குகளைத் தடை செய்வதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த வாக்ககெடுப்பை எலான் மஸ்க் நடத்தியுள்ளார்.


"எங்கள் பயனர்கள் பலர் பிற சமூக ஊடக தளங்களில் செயலில் உள்ளதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இருப்பினும், ட்விட்டரில் சில சமூக ஊடக தளங்களை இலவசமாக விளம்பரப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என டிவிட்டர் நிறுவனம் ட்வீட் தெரிவித்தது. "குறிப்பாக, Facebook, Instagram, Mastodon, Truth Social, Tribel, Nostr மற்றும் Post ஆகிய தளங்களுக்கான இணைப்புகள் அல்லது பயனர்பெயர்களைக் கொண்ட பிற சமூக தளங்கள் மற்றும் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கணக்குகளை அகற்றுவோம்" என்றும் விளக்கமளித்துள்ளது.


டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்:


பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில், இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பினார் எலான் மஸ்க். அதைதொடர்ந்து, நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும்  தனிநபர்களுக்கு நீல நிற டிக் என,  மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தினார்.


டிவிட்டரில் 420 வார்த்தைகளை எழுதலாம்?:


டிவிட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் எலான் மஸ்க், பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, அவர்களின் பரிந்துரைகள் நன்றாக இருந்தால் அவற்றை டிவிட்டர் செயலியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கிறார். அந்த வகையில்,  ட்விட்டர் பயனர் ஒருவர் ட்விட்டர் 2.0 எழுத்து வரம்பை 280க்கு பதிலாக 420 ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு மஸ்க், "நல்ல யோசனை" என்று பதிலளித்தார். அதைதொடர்ந்து, அந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என சமீபத்தில் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தகக்து.