தமிழகத்தில் மத்திய பகுதியான  திருச்சி மாவட்டத்தில்  ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஆய்வில் 11 சதவீதம் அளவுக்கு மக்கள் தொகை பெருக்கம் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.  அதற்கேற்றவாறு வாகன நெருக்கடியும் கணிசமாக அதிகரித்து வருகிறது. போக்குவரத்து  நெரிசலுக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், ஒரே தீர்வாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பதே மேலோங்கி இருந்தது. திருச்சி மாவட்ட மக்களின்   பல ஆண்டு கனவை நிறைவேற்றும் வகையில் தேர்தல் வாக்குறுதியிலும், பட்ஜெட்டிலும் அறிவித்தபடி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 140 கோடியில் வணிக வளாகத்துடன்கூடிய  ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைகிறது.

 

பஞ்சப்பூரிலேயே 76 கோடியில் கனரக சரக்கு வாகன முனையம், ரூ.75 கோடியில்  புதிய  தார்ச்சாலைகள், மழை நீர் வடிகால்கள் மற்றும் இதர உட்கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், ரூ.59 கோடியில் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம்  அமைக்கபட உள்ளது.  மேலும் ரூ.11.50  கோடி மதிப்பீட் டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை ரோடு வாகன நிறுத்துமிடத்தில் மாநகராட்சி சேவை மையம் மற்றும் ஆலோசனை மையம் கட்டும் பணி, ரூ.26 கோடியில் பிரதான தார்ச்சாலைகள் சீரமைப்பு  பணி,  ரூ.20 கோடியில் 140 சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட 10 துறைகளுக்கு ரூ.604.10  கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

 



 

இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி  திருச்சி யில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து பஞ்சப்பூர்  ஒருங்கிணைந்த பேருந்து  நிலையம் அமைப்பதற்கான  பூர்வாங்க  பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது.. திருச்சி-மதுரை  தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் அருகே  தமிழக  முதல்வர் ஸ்டாலின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

 

அதனை தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூர் பகுதியில்   அமைய இருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு  தனி தளம் அமைப்பது, சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் ஏற்படும் ஆபத்தை  தடுப்பதற்காக லாரிகளுக்கு தனி தளம் அமைப்பது, மேலும் காய்கறி வியாபாரம் செய்வதற்காக மொத்த காய்கறி மார்க்கெட் அமைப்பது என உள்ளிட்ட பல்வேறு  திட்டங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை மாநகராட்சி சார்பில் டெண்டர்  விடப்பட்டது.   இதனை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.

 



 

ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் மாதிரி தோற்றம், எத்தனை   நடை மேடைகள்,   எவ்வாறு  பேருந்து  நிலையத்திற்குள் பேருந்துகளை அனுமதிப்பது, கட்டுப்பாட்டு அறைகள், உதவி மையங்கள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், தண்ணீர் வசதிகள், கழிப்பறை வசதிகள்,  மருத்துவமனை, காவல்துறை சோதனை சாவடி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மையம் அமைத்தல் உள்ளிட்ட மாதிரிகள் அடங்கிய செயல்திட்டங்கள் பொருந்திய விரிவான திட்ட அறிக்கையை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயார் செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்து உள்ளது.

 

இந்த அறிக்கை திருச்சி மாநகராட்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்வதற்காக நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் சார்பில் தொழில்நுட்பக்குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவானது ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் அமைய உள்ள ஒவ்வொரு செயல்திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும். 15 நாட்களுக்குள் இதுதொடர்பான அறிக்கை முடிவு செய்யப்படும். மேலும் அதில் சில செயல் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் அரசு வழிகாட்டுதலின்படி சர்வதேச அளவில் ஏலம் விடுவார்கள் அது முடிந்தவுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்கும் பணி தீவிரமாக தொடங்கும் என்றனர்.