தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் 75வது பிறந்தநாள் விழா திருவெறும்பூர் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில்  பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மேலும் இந்த மண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மணியரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்  பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது, “பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது விருப்பமில்லை. ஆனால் நாம் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். அப்படி கொண்டாடுவதால் நம் உணர்வுகள் இருமடங்காக ஆகிறது. மக்களுக்காக போராடுபவன் தலைவன் ஆகிறான். மக்களை போராட வைப்பவன் புரட்சியாளன் ஆகிறான். வரலாறு எந்த தலைவருக்காகவும் காத்திருப்பதில்லை. இருப்பவன் ஒருவனை தேர்வு செய்து செல்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கவலை அடைந்த நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக விளையாட்டு மைதானத்தில் 2.50 லட்சம் குடி தண்ணீரை வீணாக்கினார்கள். இதைக் கேட்ட என்னை சிறையில் அடைத்தனர்.  என் மீது 176 வழக்குகள் உள்ளது. சிறைச்சாலை நமக்காக தான், நாம் சிறை பறவைகள்,  சீமானை யாரும் ஜெயிலுக்கு அனுப்ப முடியாது , போனால் எல்லோரும் போவோம்.




தமிழனாக பிறந்தால் மட்டும் தமிழன் இல்லை. யார் இறுதிவரை உறுதியாக உழைக்கிறானோ அவன் தான் தமிழன். ஜாதி, மதம் அடிப்படும் போது தமிழனாக இல்லாமல், இனத்திற்கு அடிவிழும் பொழுது கொதித்து எழுபவன் தான் தமிழன். ஒருவன் உயிரை இழப்பதை காட்டிலும் உரிமையை இழப்பது தேசிய மற்றும் நாட்டின் பெரிய இழப்பு ஆகும். தமிழ்நாடு அரசு அலுவலக கட்டிடங்களில் தமிழில் பெயர்  பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அங்குள்ள கோப்புகளில் தமிழில் இருக்காது. மோடி தமிழ் மொழி சிறந்தது என்பார், ஆனால் பாராளுமன்ற கட்டிடத்தில் ஆங்கிலம்,  இந்தி, சமஸ்கிருதம் மொழிகளில் கல்வெட்டு இருக்கும், தமிழ் மொழியில் இருக்காது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமைச்சராகவே இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.  செப்டம்பர் மாதம் உரிமைத்தொகை தருவதற்கு இப்போது ஏன் விளம்பரம் அதற்கு எத்தனை கோடி செலவு. நாம் அடிமையான இனம், தாய் நாட்டில் தமிழ் மொழியை படிக்க முடியாது. மற்ற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு அந்த  மாநிலங்கள் 90 விழுக்காடு வைத்துக் கொள்கிறது.  மற்ற மாநிலங்களுக்கு பத்து விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்குகிறது. ஆனால் நாம்  தமிழகத்தில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்கிறோம். ஆனால் உயர் நீதிமன்றம் 20 விழுக்காடு தான் ஒதுக்குகிறது.




நாள்தோறும் குடிப்பதற்காக செலவு செய்யும் நம் மக்களுக்கு எதற்கு இலவசம்,  தமிழ் மொழியின் வீழ்ச்சி, தமிழர் வீழ்ச்சி இரண்டு மொழியில் கையெழுத்து போடும் ஈன இனம் நமது இனம் மட்டும் தான். குறிப்பாக  சாலையின் ஓரத்தில் ரேஷன் கடை உள்ளது. அதன் அருகிலேயே மதுபான கடை உள்ளது. பக்கத்தில் வாங்கி கொடுப்பதற்கு எதற்கு இலவசம். வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள் தற்பொழுது தமிழர்களுக்கான வரலாறு எழுதும் நேரம் வந்துவிட்டது. பிரபாகரனுக்கு நிகழ்ந்தது நமக்கும் நிகழலாம். எதிரிகள் தூரத்தில் இருப்பார்கள், துரோகிகள் அருகே இருப்பார்கள்” எனக் கூறினார்.


இந்த விழாவில் தமிழ் தேசிய பேரியக்கம் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.