திருவெறும்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளரை சந்தித்து பேசும்போது... "ஒவ்வொரு ஆண்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்ற பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. தண்ணீருக்காக அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலை இருக்கின்ற வரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்.


இதன் மூலம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுத்தும். இவர்கள் ஆட்சியாளர் இல்லை. இவர்கள் வரி என்ற பெயரில் இருக்கிறார்கள். இது மாறி மாறி தான் நடைபெறும். பொங்கலுக்கு இலவசமாக பொருட்கள் வழங்குவதற்காக குஜராத்தில் கொள்முதல் செய்து வழங்கினர். அப்போது அங்கு கட்டுப்பாடு ஏற்பட்டது போன்ற சூழல்தான் தமிழகத்திலும் ஏற்படும். சாதனை என்று சொல்ல முடியாது. நாடும் நாட்டு மக்களும் பட்டிருக்கின்ற வேதனைகளைதான் விளக்கி பேச வேண்டும். அதானியை வளர்த்து விட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள். எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்.




மேலும், எந்தத் துறையிலும் ஒரு வளர்ச்சியும் இல்லை. அவருடைய ஆட்சி அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கலைஞர் கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார்கள். அதே போன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது உதயநிதியை துணை முதல்வராக ஆக்கி விடுவார்கள். திமுக மற்றும் பாஜக மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது. செயல் அரசியலும் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே விளம்பரம் செய்து கொள்கிறார்கள். அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். செப்டம்பரில் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ள நிலையில் அதனை தற்போதையிலிருந்து விளம்பரம் செய்து வருகிறார்கள். வெறும் செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள் சேவை அரசியல் இவர்கள் செய்யவில்லை. ராணுவ வீரரின் புகார் வேதனை அளிக்கிறது. நாட்டைக் காப்பாற்ற எல்லையில் நிற்கும் வீரருக்கு தன் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ பதிவு செய்தது வேதனை அளிக்கிறது. இப்படி இருந்தால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் எப்படி ராணுவத்தில் சேர விரும்புவார்கள். ஆளுநர் இதையெல்லாம் எங்கு கவனிக்க போகிறார்? அவருக்கு இது வேலை இல்லை. அவருக்கு கொடுத்த வேலையை அவர் தற்போது செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் ஐபிஎஸ் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. இஸ்லாமிய சிறை கைதிகளை இவர்கள் விடுதலையும் செய்ய மாட்டார்கள். அதே போன்று சிறப்பு முகாமில் உள்ளவர்களையும் விடுதலை செய்ய மாட்டார்கள். அதற்கு வேறு ஆட்சி மாறினால் தான் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்” என தெரிவித்தார்.