திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (40). நடராஜனுக்கு, முதுவத்தூர் கிராமத்தில் காலிமனை உள்ளது. இவரது பெயரில் உள்ள பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய லால்குடி தாலுகா அலுவலகத்துக்கு ஆன்-லைன் மூலம் லட்சுமி விண்ணப்பித்திருந்தார். பின்னர், தனது மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க அவர், தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு புள்ளம்பாடி மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த பிரபாகரன் (39), முதுவத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த சதீஷ்குமார் (35) ஆகியோர் பணியில் இருந்தனர்.
அவர்கள் ரூ.15 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் திருத்தம் செய்து தருவோம் என்று லட்சுமியிடம் கூறியுள்ளனர். பின்னர் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் கேட்டனர். லஞ்சம் தர விரும்பாத லட்சுமி இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை வாங்கிய லட்சுமி, லால்குடி தாசில்தார் அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றார். அங்கு இருந்த துணை தாசில்தார் பிரபாகரன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார்.
திருச்சி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து அரசு அலுவலங்களில் பணிபுரியும் அதிகாரிகள் எந்த வேலையாக இருந்தாலும் லஞ்சம் கேட்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக அரசு அலுவலங்களில் பணியாற்றும் அதிகாரிகள், லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக யார் நடந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரித்து உள்ளனர்.