வேங்கைவயல் வழக்கில் தீவிரமடையும் விசாரணை - சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை
வேங்கைவயல் வழக்கில் மேலும் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடத்தபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில் முன்னேற்றம் ஏற்படாததால், இந்த வழக்கை கடந்த ஜனவரி 14ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர், பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று 147 பேரிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்தனர். இந்நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் வேங்கைவயல் மற்றும் இறையூர் ஆகிய கிராமங்களில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த நபர்களை கைது செய்வதற்காக அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க வேங்கைவயல், இறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனையை கோர்ட்டு அனுமதியுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளன. அவை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசாா் அனுமதி பெற்றனர்.இதில் இறையூர் பகுதியை சோ்ந்த 4 பேர், வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் ஒருவர் சிறுவன் ஆவார். இந்த நிலையில் கோா்ட்டு அனுமதி பெற்ற நிலையில் சிறுவன் உள்பட 5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. ஒருவர் உடல் நலக்குறைவால் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரவில்லை. பரிசோதனைக்கு வந்த மற்ற 5 பேரிடமும் ரத்த மாதிரியை மருத்துவ குழுவினர் சேகரித்தனர்.
Just In
மேலும் இந்த ரத்த மாதிரி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அதன்பின் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் டி.என்.ஏ. பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கிடைக்கும் பரிசோதனை முடிவுகள், குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தம், தண்ணீரின் பரிசோதனை முடிவுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதுடன் ஒப்பிடப்படும். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொள்வார்கள். கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் இந்த சம்பவம்நடந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.