திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பஞ்சீலி ஊராட்சிக்குட்பட்டது டி.ஈச்சம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ள அவலம். இது தொடர்பாக அந்த கிராம மக்கள்  சவுந்தரராஜன் (67) கூறுகையில்,  ‛‛டி.ஈச்சம்பட்டி கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தை சேர்ந்த நான், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். மேல்நிலைக் கல்வி பயிலும் பேரன்கள் எனக்கு உள்ளனர். ஆனால், திருமணம் செய்த நாள் முதல் என்னையும், என் குடும்பத்தினரையும் ஊரில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளாக ஊரில் மற்றும் உறவினர்கள் வீட்டில் நிகழும் சுக துக்க நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றில் நாங்கள் கலந்துகொள்ள முடியவில்லை. எங்கள் வீட்டு சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்பவர்களையும் ஊரில் இருந்து தள்ளிவைத்து விடுவதால் மன வேதனையாக உள்ளது. இந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.




இதேபோல், காதல் திருமணம் செய்துக்கொண்ட  தம்பதிகள் பாஸ்கரன்- சீதாலட்சுமி, ரங்கநாதன்- காவியா, கருணாநிதி- அஞ்சலி தேவி, பிரபு- மேனகா ஆகியோர் கூறியது எங்கள் ஊரில் எங்களைப் போல் கலப்பு மணம் புரிந்த 20க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. கலப்பு திருமணம் செய்ததற்காக ஊர் முக்கியஸ்தர்கள் எங்களை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். கலப்பு மணம் புரிந்த குடும்பங்களுடன் பேசுவது உட்பட எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஊர் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.மேலும் கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை. வழக்கமான நேரங்களிலும் கோயிலில் பிறருடன் இணைந்து வழிபட முடியவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் இருக்கும்போது கடையில் சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை. எங்களுடன் எங்கள் பெற்றோர் பேசுவது தெரியவந்தால் அவர்களையும் ஒதுக்கிவைத்து விடுகின்றனர்.குடிநீர் வசதியோ, அரசின் சலுகைகளோ எங்களுக்கு வழங்குவதில்லை. வீட்டுக்கு வரி ரசீது கேட்டால், ஊரை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர். இந்த மன உளைச்சல் காரணமாக கலப்பு மணம் புரிந்த பலரும் பல ஆண்டுகளாக வெளியூர்களில் சென்று வசித்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.




கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற தீண்டாமை ஒழிப்பு சம்பவம் இந்த கிராமத்தில் நடந்து வருவதாகவும் ,பல்வேறு கட்டங்களாக புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என்றும் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் தீண்டாமை ஒழிப்பு குற்றமா என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.தன்னுடைய உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், பெற்ற தாய், தந்தையை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக வெளியூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம், மனவேதனையை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை என கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து பலமுறை காவல் துறையிடம் புகார் அளிக்க சென்றபோது ஊரில் உள்ள முக்கிய நபர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுத்தார்கள், இதையெல்லாம் தாண்டி தற்போது புகார் அளித்துள்ளோம் என்றனர்.மேலும் கலப்பு திருமணம் செய்து கொண்டால் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தீண்டாமை ஒழிப்புக்கு எதிராக போராடிய திராவிட கழகம் எங்களுடைய கிராமத்திற்கு ஒரு விடியலை ஏற்படுத்தி தருமா என்ற எதிர்பார்ப்புடன் கிராம மக்கள்.