திருச்சி, ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. ஆகையால் 108 வைணவ தலங்களில் முதன்மையான தளமாக இது விளங்குகிறது. குறிப்பாக பூலோகம் வைகுண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். இத்தகையை சிறப்பு மிக்க கோவில் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பது குறிப்பிடதக்கது. மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளது. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும். கோவிலின் கிழக்கு புறத்தில் இருக்கும் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள கோபுரத்தில் இருந்து இடிந்து விழுந்த பகுதிக்கு வந்த இந்து முன்னனி கட்சி சார்பாக இந்து அறநிலை துறை மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகளையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்பு அங்கு இருந்து பேரணியாக கண்டன கோஷங்களை எழுப்பிக்கொண்டே வெள்ளை கோபுரம் வழியாக கோவில் இணை ஆணையார் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிர்வாகமும் , இந்து அறநிலை துறை அதிகாரிகளும் பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  உள்ள அனைத்து கோபுரங்களும் சேதமடைந்துள்ளது, ஆகையால் உடனடியாக சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று மனு கொடுத்துளோம். ஆனால் இவர்களின் அலட்சியம் காரணமாக தான் இன்று கிழக்கு கோபுரத்தில் உள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளது என குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து 20 நிமிடஙளுக்கு மேலாக கோவிலுக்குள் இந்து முன்னனி கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனடியாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களையும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் , இல்லை என்றால் மிகபெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பின்பு கோவில் நிர்வாக இன்னும் 2 நாடகளில் பணிகள் தொடங்கும் என தகவல் தெரிவித்ததாக கூறினர்.  




இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, "இந்த கிழக்கு வாசலில் இருக்கும் கோபுரம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும். முதலில் மொட்டை கோபுரமாக இருந்தது. பின்பு நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் அவை பூரண அமைக்கப்பட்டு,மேல் நோக்கி கோபுரமாக எழுப்பப்பட்டது. குறிப்பாக இந்த கோபுரம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோபுரத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் சில காரணங்களால் இன்று கோபுரத்தில் இருக்கும் சுவர் இடிந்து விழுந்து விட்டது. கோபுரத்தை சீரமைக்கும் பணிக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்து அறநிலை துறைக்கு அனுப்பப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் ரூபாய் 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து , பழமை மாறாமல் முழுமையாக கோபுரம் சீரமைக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.