தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் அச்சமின்றி தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


அதை தொடர்ந்து 7 ஆம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருவிகையில் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார். மேலும் 8 ஆம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்க விலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.




இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் மேஷ லக்னத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது. கீழச்சித்திரை வீதியில் இறந்த புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார். தேரோட்டத்தையொட்டி திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1000க்கும்  மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




தஞ்சை களிமேடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பர் சுவாமிகோவில் தேரோட்டத்தின்போது தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்தில் கொள்ளப்பட்டன. இதையடுத்து தேர் செல்லும் வழிநெடுகிலும் உள்ள மின் வயர்கள் மற்றும் மரக்கிளைகள் ஏதேனும் இடையூறாக இருக்கிறதா? என ஆய்வு செய்ய மின்வாரியம், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தனி சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.  அதே போல் தேரோட்டம் தொடங்கும் முன்பாக காலை 6 மணி முதல் 11 மணி வரை அந்த பகுதியில் மின் தடை அமல்படுத்தப்பட்டது. நாளை (சனிக்கிழமை) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தா வரணம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். நாளை மறுநாள் (1-ஆம் தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.