Trichy: பொதுமக்கள் கோரிக்கை; கழுத்தளவு நீரில் கள ஆய்வு செய்த எம்எல்ஏ- காரணம் என்ன?

புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்களை  தூர்வார நீர்வளத்துறை அதிகாரியிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்த  பழனியாண்டி எம்.எல்.ஏ, கழுத்தளவு நீரில் இறங்கி ஆய்வு செய்தார்.

Continues below advertisement

திருச்சி மாவட்டம், காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூர், திட்டுக்கரை, சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர், மேக்குடி, கடியாகுறிச்சி, அல்லூர், பழுர், முத்தரசநல்லூர், கூடலூர், கம்பரசம்பேட்டை, மல்லச்சிபுரம்  ஆகிய கிராமங்களின் வழியாக வரும் புதுவாத்தலை மற்றும் ராமாவா்த்தலை வாய்க்கால்கள், இக்கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன.

Continues below advertisement

வாய்க்கால்கள் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் மண்டி வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளன இதனால் இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வது காலதாமதம் ஆகி வருகிறது.

இதனை அடுத்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை நேரில்  சந்தித்து வாய்க்காலை தூர்வாரக் கோரிக்கை வைத்தனர்.


வாய்க்காலில் குதித்து ஆய்வு செய்த எம்.எல்.ஏ பழனியாண்டி 

மேலும் பொதுமக்களை அழைத்துக்கொண்டு நேரடியாக வாய்க்கால்களை பார்வையிட்டார் எம்எல்ஏ பழனியாண்டி. இன்று பாலத்தில் விரிசல் இருப்பதாகவும் பலப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.  உடனடியாக வாய்க்காலில் இறங்கி ஆய்வு செய்தார் எம்எல்ஏ பழனியாண்டி. 

இதனையடுத்து  உடனடியாக நீர்வளத்துறை  அலுவலகத்திற்கு விவசாயிகளுடன் நேரில் சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ  அங்கிருந்த செயற்பொறியாளர் நித்தியானந்தத்தை சந்தித்து உடனடியாக வாய்க்கால்களை தூர்வாரி கரையை பலப்படுத்த கோரிக்கை  மனு அளித்தார். 

இந்ந நிகழ்ச்சியின்போது  அந்தநல்லூர் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் மலர் அறிவுரசன்,  திமுக நிர்வாகி கைக்குடி சாமி,  எம்.எல்.ஏ வின் உதவியாளர் சோமரசம்பேட்டை ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி துணை அமைப்பாளர் லெட்சுமணன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Continues below advertisement