திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரையை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் விதிமுறைகளை மீறி 100 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் உள்ளது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகள்படியும், தமிழக அரசு விதித்துள்ள உள்ளாட்சி துறைகளின் விதிகளை மீறியும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. 54 சதவீதம் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிட விதிமீறல் தொடர்பாக திருச்சி மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவிடப்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்