திருச்சி திருவானைக்காவல் மாம்பழச்சாலையில் அரசு நிதி உதவியுடன் பச்சிளம் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெற்றோர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகள் சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூச்சு திணறலால் ஒரு குழந்தை இறந்து விட்டது.  மேலும் பிரியா என்ற பிறந்து 57 நாட்கள் ஆன குழந்தை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 10 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனை அனுமதிக்கபட்டது. மேலும் கடந்த 30 ஆம் தேதி  காப்பகத்தில் உள்ள 3 மாதம் முதல் 9 மாதம் வரையிலான 20 பச்சிளம் குழந்தைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக வழக்கமான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் 2 ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகளுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காப்பக பணியாளர்கள் உடனடியாக அந்த குழந்தைகளை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்தக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். மேற்கண்ட குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருந்த நிலையில் அதற்குரிய மருத்துவம் பார்க்காமல் தடுப்பூசி செலுத்தியதால் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 





மேலும் சில குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவும், எடை குறைவாகவும் இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கின்றனர். காப்பகத்தில் உள்ள குழந்தைகளில் 9 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 3 குழந்தைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று இரவு பிரியா என்ற பிறந்து 57 நாட்கள் ஆன பெண் குழந்தையும், கார்குழலி என்ற 3 மாத பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தது. அரசு நிதி உதவியுடன் இயங்கும் காப்பகத்தில் அடிக்கடி குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது, இறந்து போவது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது . இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவங்களை குறித்து.   சமூக ஆர்வலர்கள் கூறியது.. திருச்சி மாவட்டத்தில்  ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கமாக இருக்கிறது. பல இது குறித்து செய்திகள் வந்தாலும் மாவட்ட நிர்வாகம் அலட்சியப் போக்கை  காண்பிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.




இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு கூறுகையில், “நிமோனியா மற்றும் தீவிர சளி தொற்று காரணமாக சாக்கீடு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மேலும் காலநிலை மாற்றத்தால் இது போன்ற காய்ச்சல் பாதிப்பு வருவது இயல்பு என்றாலும் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்” என தெரிவித்தார்.