திருச்சி மாநகர், வாமடம் என்ற பகுதியில் தாத்தா-பாட்டி வீட்டில் 9 வயது சிறுமி தங்கி 4ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானாள். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால் சிறுமியின் தாத்தா தில்லை நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


பின்பு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர், அப்போது சத்திரம் பேருந்து நிலையத்தில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் சென்று சிறுமியை மீட்டு விசாரித்தனர்.


அப்போது சிறுமி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில்.. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை வாலிபர் ஒருவர் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். சத்திரம் பஸ் நிலையம் அழைத்து சென்று, அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு சென்று இரவு முழுவதும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் காலை மீண்டும் சிறுமியை சத்திரம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு தப்பியுள்ளார் என தகவல் தெரியவந்தது. 




இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை தீவிரபடுத்தினர்.


மேலும், அந்த வாலிபர் திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்த சின்ராசு(24) என்பதும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த சின்ராசுவை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய சின்ராசு தடுமாறி விழுந்ததில் கால் முறிந்தது.


இதையடுத்து போலீசார் சின்ராசுவை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கூறுகையில்.. சின்ராசுக்கு சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் முதல் திருமணம் நடந்தது. சில மாதங்களில் மனைவி பிரிந்து சென்றார். தொடர்ந்து, சேலத்தில் 2வது திருமணம் செய்துள்ளார். அவரும், சில மாதங்களில் சின்ராசுவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சின்ராசு இதுபோன்ற செயலில் மற்ற பகுதிகளில் ஈடுபட்டுள்ளாரா? என்று விசாரணை நடக்கிறது என்றனர்.




இந்நிலையில் திருச்சி வாமடம் பகுதியில் பொதுமக்கள் சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணமான நபருக்கு அதிகபட்ச தண்டையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று , திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.


இதனைதொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தனர்.