தமிழ்நாட்டில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கேட்டதை தருபவள், நினைத்ததை நிறைவேற்றுபவள், சங்கடங்கள் எத்தனை வந்தாலும் துணை நின்று காப்பவள் என சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வார்கள்.


அதிலும் குறிப்பாக ஆடி மாதம் என்றாலே தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபாதையாக சென்று தங்களது நேற்றிக்கடன் செலுத்துவது வழக்கம்.


ஆடி மாதம் முழுவதும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் தொடர்ந்து நடைபெறும்.


குறிப்பாக ஆண்டு தோறும் நடைபெறும் தேர் திருவிழா மற்றும் மாசி, பங்குனி மாதங்களில் நடைபெறும் பச்சை பட்டினி விரதம் உள்ளிட்ட நிகழ்வுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருவார்கள் அப்போது சமயபுரமே விழாக்கோலம் கொண்டிருக்கும்.




சமயபுரம் மாரியம்மனை மனதில் நினைத்து பூஜை செய்தால், வேண்டியவை அனைத்தும் நிறைவேறும். சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். இத்தகைய உலக சிறப்புமிக்க சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டும் ஆடி மாத திருவிழா விழா கோலம் கண்டுள்ளது. 


ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அம்மாவாசை பக்தர்களின் கூட்டம் அலைமோதும். 


மேலும் இக்கோவிலுக்கு பழைய திருச்சி- சென்னை சாலையில் நுழைவு வாயில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு வாயிலாக பக்தர்கள் தங்களது நேற்றிக்கடனை செலுத்துவதற்கு வரிசையாக செல்வது வழக்கம். 




சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி


இந்நிலையில் நேற்று நள்ளிரவு சமயபுரத்திலிருந்து கருக்கா மூட்டை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று சமயபுரம் நுழைவாயிலில் வளைவு வழியாக வந்தது. அதிக பாரம் ஏற்றியதாலும், நுழைவாயில் வளைவு வழியாக வர முடியாத காரணத்தினாலும் எதிர்பாராத விதமாக நுழைவாயில் வளைவு இடது புற தூண் மீது லாரி மோதியது. இதில் இடது பக்க தூண் மற்றும் மேல் புறமும் பலத்த சேதமடைந்தது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் வளைவு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.


இதனால் அனைத்து விதமான வாகனங்களும் அவ்வழியாக செல்ல முடியாதபடி போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இன்று ஆடிப்பெருக்கு மற்றும் நாளை ஆடி அமாவாசை எனத் தொடர்ந்து விசேஷ தினங்களாக உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். சமயபுரத்திற்கு அம்மனை தரிசிக்க வரக்கூடிய பக்தர்கள் நுழைவாயில் வளைவை தரிசித்து விட்டுத்தான் கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.