திருச்சி மாவட்டத்தின் மையப்பகுதியில் காந்திமார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டை சுற்றி ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. காந்திமார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் சரக்கு லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. மேலும் காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள மளிகை மண்டி, பழக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கும் சரக்குகள் லாரிகளில் வந்து இறங்குகிறது. இதனால் காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தாலும், காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதாலும் திருச்சி-தஞ்சை சாலையில் காந்திமார்க்கெட் அஞ்சுமன்பஜார் போலீஸ் சிக்னலில் இருந்து தர்பார்மேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.




இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக கடந்து செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள். குறிப்பாக அந்த பகுதியை கடக்க மட்டுமே நீண்டநேரமாகிறது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன. அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் முன்பு வாகனங்களை மணிக்கணக்கில் நிறுத்தி வைத்து கொண்டு நேரம், காலமின்றி சரக்கு ஏற்றி, இறக்குவதாலும் இவ்வாறு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற போக்குவரத்து நெரிசலால் அவசர ஆம்புலன்சுகளும் துரிதமாக செல்ல முடியாத அவலநிலை நீடித்து வருகிறது. காந்திமார்க்கெட்டுக்கு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் காய்கறிகள் வாங்கவும், மளிகை பொருட்கள் வாங்கவும் வந்து செல்கிறார்கள். ஒரேநேரத்தில் அளவுக்கு அதிகமான மக்கள் நடமாடக்கூடிய பகுதியாக காந்திமார்க்கெட் உள்ளது. ஆகவே அங்கு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை போக்குவரத்து பிரச்சினைக்கு குறைந்தபட்சம் தற்காலிக மாற்று நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


காந்தி மார்க்கெட் பகுதி என்பது, திருச்சி மட்டுமல்ல திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து காய்கறிகள், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக தினந்தோறும் பொதுமக்கள் வருவார்கள். இந்நிலையில் அப்பகுதியில் சாலைகள் மேம்படுத்தப்பட்டாலும், அங்கு வரும் வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது. ஆகையால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் சாலையோர கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.