திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கமானது. அதன்படி 2 நாட்களுக்கு முன்பு  கோவில் மைய மண்டபத்தின் மாடியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அந்த கோவிலின் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக உண்டியலில் இருந்த பணம், வெள்ளி, தங்க நகைகளை தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் வெற்றிவேல் என்பவர் தங்க காசுகளை எடுத்து மறைத்து வைத்ததை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சிலர் பார்த்து இதுகுறித்து இணை ஆணையர் கல்யாணியிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடனே புகார் கூறப்பட்ட அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கோவில் பணியாளர்கள் மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது சட்டை பையில் தங்க காசுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரிடம் இருந்த 30 கிராம் எடையுள்ள 5 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 




இந்த நிலையில் தன் மீது நடவடிக்கை எடுத்தால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக வெற்றிவேல் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சக அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதே நேரத்தில் பக்தர்கள் தரப்பில் நகை திருடிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தார். இதனை அறிந்த அவர் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து, இணை ஆணையர் கல்யாணி இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருச்சி மண்டல இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து காணிக்கை எண்ணும் போது தங்க காசுகளை திருடிய திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் மீது சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.