திருச்சி திருவானைக்காவல் அகிலாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 34). இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார். கார்த்திகேயனின் தாய் வசந்தா (63). இவர்கள் அனைவரும் அகிலா நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கார்த்திகேயன் 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் கார் டிரைவராக வேலைக்கு சென்றார். அவ்வப்போது விடுமுறையில் அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். வசந்தபிரியா ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இந்தநிலையில் நேற்று மாலை 6.45 மணி அளவில் வசந்த பிரியா வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. உடனே வசந்த பிரியா கீழ் வீட்டில் குடியிருந்தவர்களிடம் இது பற்றி கூறினார். அந்த வீட்டில் இருந்த கல்லூரி மாணவர் ஒருவர் பக்கவாட்டு சுற்றுச்சுவர் வழியாக ஏறி மாடி வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது, அங்கு கார்த்திகேயன், அவரது தாய் வசந்தா, மகன் சாமிநாதன் ஆகியோர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் கீழே இறங்கி அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியவர்களின் உடல்களை மீட்டு கீழே இறக்கினர். அவர்களது உடலைக் கண்ட வசந்த பிரியா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.






இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதாலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு வந்து, இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் பிணமாக கிடந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது, கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், 'என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல' என்றும், தாய், மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வசந்த பிரியா மற்றும் அவருடைய உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறு காரணமாக கார்த்திகேயன், தாய் மற்றும் மகனை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.