திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மூவர்ணத்திலான பலூன்களைப் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு அணிவகுப்பினைப் பார்வையிட்டார். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். பின்னர் காவல் துறையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 104 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கத்தினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் வழங்கிப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, போக்குவரத்துத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 432 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.




மேலும், வருவாய்த்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூபாய் 78,000 மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூபாய் 12,93,000 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூபாய் 12,35,000 மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 2,37,992 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 3,75,989 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூபாய் 1,05,000 மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 13,380 மதிப்பீட்டிலும் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூபாய் 33,38,361 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீ விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகளில் பங்பேகற்ற அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நினைவு பரிசினை வழங்கிப் பாராட்டினார். முன்னதாக குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


இவ்விழாவில், காவல் துறை மத்திய மண்டல (திருச்சி) தலைவர் திரு.கார்த்திக்கேயன்,இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி, இ.கா.ப., காவல்துறை துணைத்தலைவர் திருச்சி சரகம் திரு.மனோகர்,இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.வருண்குமார்.இ.கா.ப., துணை ஆணையர்கள் திரு.அன்பு, திரு.செல்வகுமார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.சா.சரண்யா, உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.