ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு 2ம் இடம் கிடைத்துள்ளது. 20 லட்சம் பேருக்கும் குறைவான பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் திருச்சி 2ம் இடம் பெற்றுள்ளது. சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் கணக்கெடுப்பில் ஆசியாவில் சிறந்த விமான நிலைய பட்டியலில் திருச்சி 2ம் இடம் பெற்றிருக்கிறது. 4 கோடி பயணிகளுக்கும் மேல் வந்து செல்லும் பெரிய விமான நிலைய பட்டியலில் மும்பை விமான நிலையம் முதலிடம் பெற்றிருக்கிறது. திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.   திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. குறிப்பாக திருச்சியில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, கொழும்பு, குவைத், அபுதாபி, மஸ்கட் மற்றும் தோஹா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. இந்நிலையில், ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு 2ம் இடம் கிடைத்துள்ளது.




மேலும் ஆசிய பசிபிக் நாடுகளில் இரண்டு மில்லியன்  பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் மொத்தம் 28 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் விமான நிலையங்களின் சுற்றுப்புற அமைப்பு, சுகாதாரம் உணவு மற்றும் வெளிப்புற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட 32 வகையிலான பிரிவுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறையும் விமான நிலையத்திற்கு வந்து நேரடியாக பயணிகளை சந்தித்து அவர்களிடம் நடத்தப்பட்ட சர்வே அடிப்படையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆசிய பசிபிக் நாடுகளில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் கூறுகையில், "திருச்சி விமான நிலையத்தில் மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய பயணிகளில் தினமும் 100 பயணிகள் விதம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதில் ஆசிய  பசிபிக் நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.




மேலும் புதிய விமான நிலைய விரிவாக்க பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் புதிய விமான நிலையத்தின் பணிகள் முடிக்கப்பட திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலைய விரிவாக்கத்திற்கு மொத்தம் 345 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில் முதல் கட்டமாக 41 ஏக்கர் நிலம் தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 295 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கக்கூடிய 166 ஏக்கர் நிலம் எடுப்பதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல் கார்கோவில் தினமும் 20 மெட்ரிக் டன் சரக்குகள் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை மேலும் அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய இரண்டு நாடுகளுக்கு அதிகமான அளவில் பயணிகள் செல்கின்றனர். எனவே தற்போது பணிக்கால விமான சேவை பட்டியல் வருகின்ற 28 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. கோடை கால விமான சேவை பட்டியல் வருகின்ற 29ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அந்த பட்டியலில் மும்பை டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு நேரடியாக திருச்சியில் இருந்து விமான சேவை வழங்குவதற்கான வாய்ப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது” என்று கூறினார்.