தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பதற்காக வரும் 29 ஆம் தேதி திருச்சி  மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்பு மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் ஒரு கோடியாவது பயனாளிக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், “தமிழ்நாட்டில் 2021 ஆகஸ்ட் 5 ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது அத்திட்டத்தை மக்கள் பயனடைந்து ஒரு கோடியாவது நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த அந்த நபருக்கு மருத்துவ பெட்டகத்தை முதலமைச்சர் வரும் 29 ஆம் தேதி நேரில் வழங்க உள்ளார். 

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியதுதான். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும் 2வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான் பிரத்யேக் ஆய்வகம்  சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம். கொரோனா குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது. அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்துள்ளோம். சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை நானே நேரில் சென்று சந்தித்து விசாரிக்க உள்ளேன். மாணவி அபிநயாவிற்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.

Continues below advertisement

மேலும் பத்திரிகை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019 ல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் தற்போதும் உள்ளது. விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும். கோவையில் ஒரு எய்ம்ஸ் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். 2024 தேர்தலை மையப்படுத்தி ஒன்றிய அரசு மருத்துவமனையை கட்ட முயற்சித்தாலும் தேர்தலுக்காக செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்” என்றார்.