சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தனது பெற்றோருடன் வந்து  புகார் மனு அளித்தார். அந்த புகாரில், தன்னிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த விஷ்வா (29) என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் பழகி வந்ததாகவும், அதன்பிறகு தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் வைத்து கொண்டு, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தன்னிடம் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், மடிக்கணினி, ஐ-போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் கூறி இருந்தார்.




மேலும் இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி வழக்குப்பதிவு செய்து,  விஷ்வாவை மடக்கி பிடித்தனர். அவரது வீட்டில் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் பழகி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். இவ்வாறு அவர் வீசிய வலையில் சிக்கிய பெண்களிடம் உல்லாசமாக இருந்து, அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், மாணவிகளின் பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என்றும் அவ்வப்போது மிரட்டி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார். இதுவரை சென்னையை சேர்ந்த மாணவி உள்பட ஏராளமான பெண்களிடம் பல லட்சக்கணக்கான ரூபாய் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.




மேலும் விஷ்வா மாணவிகளிடம் இன்ஸ்டாகிராமில் பழகும்போது, அவர்களுடைய படிப்பு, வசதி, குடும்ப பின்னணி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கேற்றார்போல பழகுவாராம். குறிப்பாக பெற்றோரின் அன்பு, அரவணைப்பு இல்லாத மாணவிகளிடம் ஆதரவாக பேசியும், அன்பாக பழகியும் மனதில் இடம்பிடித்துள்ளார். பின்னர் அவர்களிடம் நேரில் பார்க்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறி போய் அந்த பெண்களை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதை வைத்து மிரட்டி நகைகள் மற்றும் பணம் பறித்துள்ளார் என விசாரனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மடிக்கணினியில் 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் இருந்தன. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் , அவரிடம் இருந்து 2 மடிக்கணினி, 2செல்போன்கள், நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.