திருச்சியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 3 மணிமண்டபங்கள் திறக்கப்படாது ஏன்? - சமூக ஆர்வலர்கள் கேள்வி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மூன்று மணி மண்டபங்களை திறக்கப்படாமல் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Continues below advertisement

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில்  மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் மற்றும் நூலகம், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு மூலம் கட்டப்பட்டது. இந்த 3 மணி மண்டப பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா காணாதது பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் இந்த மணிமண்டபம்  ரூ.99 லட்சம் செலவில் முழு உருவச் சிலையுடன் 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌. இதைத் தவிர்த்து 1,184 சதுர அடி பரப்பளவில இந்த மண்டபத்தின் தரை தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் 1,722 சதுர அடி பரப்பளவு, தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ரூ.42 லட்சம் செலவில் 1,722 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் முத்தரையர் மணிமண்டபத்திற்கு ரூ.48 லட்சமும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்திற்கு ரூ.34 லட்சமும், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கு ரூ.36 லட்சம் என கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்னும் முழுமையாக  நிதி ஒதுக்கப்படாததால் இந்த மூன்று மணி மண்டபங்களும் முழுமை பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து சமூக ஆர்வலரிடம் கேட்டபோது, "அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று முக்கிய தலைவர்களின் மணிமண்டபம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் கட்ட திட்டமிட்டு பணிகளும் வேகமாக   நடந்தது. கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா காணாதது வருத்தம் அளிக்கிறது. திருச்சியில் மிகப் பிரபலமான இவர்களுடைய வாழ்க்கை வரலாறும், சாதனைகளும் இன்றைய தலைமுறைக்கு பெரிய அளவில் தெரிவதில்லை. பல சாதனைகளை படைத்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் இந்த மணி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது என்பது பாராட்டப்படக் கூடியது என்றாலும், பணிகள் முடிந்தும் ஏதோ சில அரசியல் காரணங்களுக்காக இந்த மணிமண்டபங்கள் திறக்கப்படாத சூழ்நிலையே  நிலவி வருவது வருத்தம் அளிக்கிறது. மேலும் இந்த மணிமண்டபங்கள்  அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்பதாலும் இந்த திறப்பு விழா தள்ளிப் போகின்றதோ என்கின்றனர். வரலாற்று நிகழ்வுகளை  நினைவு கூறும் இந்த மூன்று மணி மண்டபங்களையும் எப்போது திறப்பார்கள் என திருச்சி மக்கள்  பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


மேலும் பல்வேறு சாதனைகளை படைத்த முக்கிய தலைவர்களின் வரலாற்றை போற்றும் அளவிற்கு மணிமண்டபங்கள் கட்டப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்தத் திட்டம் அமையும். குறிப்பாக  இன்றைய கால தலைமுறை மக்களுக்கு வரலாற்றை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக வரலாற்றில் மிகச்சிறந்து விளங்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் , அவர்கள்  படைத்த சாதனைகள் அவர்களின்  வாழ்க்கை வரலாறை இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் திருச்சியில் கட்டப்பட்டுள்ள மூன்று மணி மண்டபங்களும் பணிகள் முழுமை பெறாமல் சிதலமடைந்து முள்புதார்கள் இடையில் தற்போது காட்சியளிக்கிறது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. 


தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாக இருந்தாலும், ஒரு திட்டத்தை முழுமையாக முடித்து அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அரசியல் கடமை ஆகும். ஆகையால் இந்த மூன்று மணி மண்டபங்களுக்கு தேவையான நிதிகளை உடனடியாக ஒதுக்கீடு செய்து அவற்றை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டால் , தலைவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இன்றைய கால தலைமுறை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றனர்.

தற்போது பணிகள் முடிந்தும் இரண்டு ஆண்டு காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் இருப்பது வேதனை அளிக்கிறது. வரலாறு போற்றுத்தக்கக்கூடிய தலைவர்களின் மணிமண்டபம் இன்று சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தவறான செயல்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டினர் இதற்கு மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Continues below advertisement