தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-3 மற்றும் குரூப்-3 ஏ-ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் 54,486 பேர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குரூப் 3 பதவிகளில் வரும் கூட்டுறவு சங்கத்தின் இளநிலை ஆய்வாளர் 14, தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் ஸ்டோர் கீப்பர் 1 என மொத்தம் 15 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுதுவதற்கு 98,807 பேர் விண்ணப்பித்தனர். இதில் 44,321(44.8%) பேர் மட்டுமே எழுதினர். தேர்வில் 54,486 பேர் பங்கேற்வில்லை. இதன்மூலம் ஒரு பணியிடத்துக்கு 2,954 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல், அரசுத் துறைகளில் உள்ள உதவி புள்ளியியல் ஆய்வாளர், கணினி ஆபரேட்டர், புள்ளியியல் தொகுப்பாளர் பணியில் இருக்கும் 217 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (ஜன. 29) நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வை 35,286 பேர் எழுதவுள்ளனர். இதற்காக 126 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

 



 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற குரூப்-3, குரூப்-3 ஏ தேர்வினை எழுத திருச்சி மாவட்டத்தில் 7,131 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு 24 மையங்களில் நடைபெற்றது. தேர்வு எழுத வந்தவர்களுக்கு முதலில் சுகாதார பணியாளர்கள் மூலம் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் நடத்தப்பட்டது. தேர்வு அறைக்குள் தேர்வர்களை காலை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். அதற்கு மேல் வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹால் டிக்கெட், ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்த தேர்வர்களை மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். 

 

காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. இதில் பொது படிப்பிற்கு 150 கேள்விகளும், திறன் மற்றும் மனத்திறன் 50 கேள்விகளும் என மொத்தம் 200 கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 7 ஆயிரத்து 131 பேரில் 3 ஆயிரத்து 425 பேர் தேர்வினை எழுதினர். இதில் 3,706 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 51.97 சதவீதமாகும். மேலும் மாவட்டங்களில் நடந்த இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக சப்-கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலர்களும், இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிகளில் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.