திருச்சி: 159 ஆண்டுகள்... மறக்க முடியாத நினைவுகளுடன் இருந்த கோட்டை ரயில் நிலையம் அருகே இருந்த மாரீஸ் பாலம் முழுமையாக இடிக்கப்பட்டது. புதிய பாலம் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 159 வருட பழமையான கோட்டை ரயில் நிலையம் அருகே மாரீஸ் பாலம் உள்ளது. இந்த பாலம் சேதம் அடைந்த காரணத்தால் கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்டது. இந்நிலையில் இந்த பழைய பாலம் திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகளின் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் இந்த வருட இறுதிக்குள் புதிய பாலமானது கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1866-ல் கட்டப்பட்டு, 1971-ல் பலப்படுத்தப்பட்ட இந்த பாலம், ஹைட்ராலிக் பிரேக்கர்கள் மூலம் இடிக்கப்பட்டது. பாலத்தின் இடிபாடுகளை அகற்ற 100 தொழிலாளர்கள் ஒரு நாள் முழுவதும் ஷிப்ட் முறையில் வேலை செய்தனர். மாரீஸ் பாலமானது உறையூரிலிருந்து மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள சாலையை இணைத்தது.
திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூர் ரயில் நிலையங்களை இணைக்கும் ரயில் பாதையின் குறுக்கே இது கட்டப்பட்டது. புதிய 30 மீட்டர் நீளமுள்ள இரண்டு வழிப்பாதை பாலம் கட்டுமானப் பணி ஒரு வாரத்தில் தொடங்கி இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்குள் தண்டவாளத்திற்கு மேலே உள்ள பாலத்தின் பகுதியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி ஏற்கனவே டிசம்பர் 2023-ல் பாலத்திற்கான புதிய மற்றும் அகலமான இணைப்பு சாலைகளை அமைக்கும் பணியை தொடங்கியது. புதிய பாலத்திற்காக ரயில்வே ரூ.12 கோடியும், திருச்சி மாநகராட்சி ரூ.34.1 கோடியும் ஒதுக்கியுள்ளன. "பழைய பாலம் இடிக்கப்பட்டதால், நிலுவையில் உள்ள சிவில் வேலைகள் வேகமெடுக்கும். பணிகள் விரைவுபடுத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படும்" என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
புதிய பாலமானது 480 மீட்டர் நீளம் இருக்கும். புதிதாக கட்டப்படவுள்ள இருவழிப்பாதை ரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ. அகலம் 20.70 மீட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீ நீளமும், 15.61 மீட்டர் அகலம் உடையதாகவும். மேற்கு பகுதியில் 225 மீ நீளமும், 15.61 மீ அகலமுடையதாக சாலையினை தடுப்பு சுவர்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், இப்பாலத்தினை இருவழிப்பாதையாக கட்டப்படுவதினால் மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகர், தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாக செல்ல இயலும். அதுவரை கரூர் பைபாஸ், பாலக்கரை வழியாக பேருந்துகள் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு நலத்திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக பேருந்து முனையமானது திறக்கப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில் சரக்கு முனையம், காய்கறி மார்க்கெட், திருச்சி டைடல் பார்க் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
அதேபோல் திருச்சி ரயில்வே பாலமும் விரைவில் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த இந்த பாலம் தற்போது இடிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் கட்டப்பட உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பழமையான இந்த பாலம் இடிக்கும் போது மக்கள் திரண்டு நின்று சற்று வேதனையுடன் பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.