திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தலம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள், சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள் ஏராளமாக இங்குள்ளது. மேலும் நீரின் சலசலப்பும், சூழலும் நாம் ஒரு மலைப்பிரதேசத்துக்குள் இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்கி, மனதை மேலும் இதமாக்கி புத்துணர்வை அளிக்கும். மேலும்  பச்சமலையும், புளியஞ்சோலையும் சூழல்சார்ந்த முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலையில், மூலிகைகள் நிறைந்த கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புளியஞ்சோலைக்கு, பிற இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் அங்கு ஓடும் நீரோடைக்கு முக்கிய பங்குண்டு. கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியிலிருந்தும், மலையிலுள்ள பிற நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய தண்ணீர் வழிநெடுகிலும் பாறைகள், கற்பரவல்களுக்கு இடையே குறைந்த ஆழத்துடன், தெளிந்த நீரோட்டமாக செல்வதால் இதில் குளித்து மகிழ இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும், சுற்றுலா பயணிகள் இங்கு குளித்து மகிழ போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால், மது அருந்துவோர் உடைத்து வீசும் மதுபாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடக்கும் பாதைகளின் வழியாக ஆபத்தான முறையில் நடந்து சென்று, குளிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.




இந்நிலையில், நீர்வள ஆதாரத்துறை சார்பில், கொல்லிமலையிலிருந்து வரக்கூடிய இந்த நீரோடை புளியஞ்சோலை பகுதியில் முடியக்கூடிய இடத்தில் உள்ள அய்யாற்றின் குறுக்கே புதிய படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கொல்லிமலையிலிருந்து வரும் நீர், மழைக்காலங்களில் வரும் காட்டாற்று வெள்ளம் ஆகியவற்றை தாங்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதால், நீர்வள ஆதாரத் துறையின் பொறியாளர்கள் குழுவினர்,புளியஞ்சோலையில் படுகை அணைக் கட்டுவதற்கான இடம், அணை வடிவம், கட்டுமானம் குறித்து அண்மையில் திட்ட அறிக்கை தயாரித்தனர். அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, தற்போது ரூ.4.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் இங்கு படுகை அணை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘கொல்லிமலையிலுள்ள ஆகாய கங்கை அருவியிலிருந்து நீரோடைவழியாக அய்யாற்றில் ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரை திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜம்பேரி, வெங்கடாஜலபுரம் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும்போது, ஆற்றின் இயல்பான படுகை மட்டத்தை நிலைநிறுத்தும் வகையில் இந்த படுகை அணை கட்டப்பட உள்ளது.




கொல்லிமலை நீர்மின் திட்டத்துக்காக புளியஞ்சோலையில் அண்மையில் கட்டப்பட்ட புதிய பாலத்திலிருந்து 400 மீட்டர் கீழ் பகுதியில், ஜம்பேரி அணைக்கு நீர்பிரிந்து செல்லக்கூடிய இடத்தில் இந்த படுகை அணை அமைய உள்ளது. பாசன பயன்பாட்டுக்காக இந்த படுகை அணை அமைக்கப்பட்டாலும் கூட, இது சமதளத்துடன் இருக்கும் என்பதால் நீரோட்டம் குறைவாக உள்ள காலங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு பாதுகாப்பாக குளித்து மகிழவும் வாய்ப்பு கிடைக்கும். படுகை அணை பணிகளை விரைவில் தொடங்கி, 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். இந்த பணிகள் முழுமையாக முடிந்த பிறகு சுற்றுலாதலம் வெகு சிறப்பாக இருக்கும், அதுமட்டும் அல்லாமல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.