தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான  தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த 26 ஆம் தேதி வெளியிட்டது.  இதன்படி திருச்சி மாவட் டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை,   துவாக்குடி, துறையூர்,  லால்குடி,  முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர்,  கூத்தைப்பார்,  மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி  முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 4 ஆம் தேதியுடன் முடிந்தது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  53 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகள் என  401 வார்டுகளில் 1, 262 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,58,674 பேர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 512632 பேர்களும் , பெண்கள் 545867 பேர்களும், மூன்றாம் பாலினம் 175 பேர்களும் உள்ளனர்.





நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.  திருச்சி மாநகராட்சியில் 65 வார்டு உறுப்பினர் பதவிக்கு 718 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 7 பேர்களின் மனுக்கள் நிராகரிப்பு செய்யபட்டு 711 பேர்கள் மனு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. மேலும்  நகராட்சியில் 676 பேர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 12 பேர்களின் மனுக்கள் நிராகரிப்பு செய்யபட்டு 664 பேர்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. இதேபோல் பேரூராட்சியில் 890  பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில்  5 பேர்கள் மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டு, 885 வேர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம்  2,284 பேர் மனுதாக்கல் செய்ததில் 24 மனுக்கள் நிராகரிப்பு செய்யபட்டு 2260 பேர்கள் மனுக்கள் ஏற்றுகொள்ளபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.




திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இதுவரை பதற்றமான வாக்குச்சாவடி என 157 வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மையங்களில் கூடுதல் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பிரச்சாரத்தின் போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை பயன்படுத்தக் கூடாது அப்படி பயன்படுத்தினால் அந்த வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவராசு  தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியிலும் ,வாகன சோதனையிலும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை வழக்குகள் எதுவும்  பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார்.