கலைமாமணி விருது வென்ற நடனக்கலைஞரும் திமுகவை சேர்ந்தவருமான ஜாகீர் உசேன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடனக்கலைஞரான ஜாகீர் உசேன் பிறப்பால் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பரதநாட்டியம் மீதான ஈர்ப்பு காரணமாக குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறியவர். குருகுல முறையில் தங்கி பரதம் பயின்று வைணவத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர். இவரின் பரதநாட்டிய பங்களிப்பை பாராட்டி இவருக்கு தமிழ்நாடு அரசின் கலைமாணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் பிரபல பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசைனை கோயிலை விட்டு வெளியே துரத்தி தகாத வார்த்தைகளில் அவரை திட்டியதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.




இம்மாதம் கடந்த 10 ஆம் தேதி பிரபல பரத நாட்டிய கலைஞரான ஜாகிர் உசைன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர் முஸ்லிம் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என கூறி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஜாகிர் உசைனை கோயிலை விட்டு வெளியே தள்ளி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.இந்த சம்பவத்தால் தனக்கு இரத்து கொதிப்பு அதிகமாகி விட்டதாகவும் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறி ஜாகிர் உசைன் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்து இருந்தார்.




இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, ஜாகிர் உசைன் வைணைவத்தின் மீது நம்பிக்கை கொண்டு பல முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென ரங்கராஜன் நரசிம்மன் அவரை துரத்தி அடித்து அவர் மதத்தையும் திட்டியுள்ளார். ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோயில் குறித்து பல பொய் செய்திகளை பரப்பி வருகிறார். தற்போது மத வேற்றுமையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளார் எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து சார்பில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடவுள் மீது முழு நம்பிக்கை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தரசினம் செய்யலாம் அதற்க்கு எந்த தடையும் இல்லை, சிலர் இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக கோயில் நிவாகத்திடம் தெரிவிக்கலாம் எனவும் சம்பந்தபட்டவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்துள்ளார்.