தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதால் தி.மு.க. பிரமுகரை தாக்கியாக பதிவான வழக்கில் அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.  அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.



இதையடுத்து கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நிபந்தனை ஜாமீன்படி முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் திருச்சியில் 2 வாரங்கள் தங்கி இருக்க வேண்டும். மேலும் கன்டோன்மென்ட் (சட்டம்- ஒழுங்கு) காவல் நிலையத்தில்  திங்கள்,  புதன், வெள்ளி என வாரத்தில் 3 நாட்கள் வீதம் 2 வாரங்களுக்கு நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வேண்டும்.




அதன்படி இந்த வாரம் திங்கள் கிழமை அதிகாலை திருச்சி வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இதனை தொடர்ந்து திங்கள், புதன்,  கிழமை காலை 10.30 மணி அளவில் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு முறை கையெழுத்திட்டர். அப்போது அவரை வரவேற்க அதிமுக தொடர்கள் அதிகளவில் கூடி இருந்தனர், இந்நிலையில்  காவல் நிலையத்தின்  வாசலிலேயே தி.மு.க.அரசுக்கு எதிராகவும்,  காவல்துறை அராஜகம் ஒழிக என்றும் கோஷம் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உள்ளிட்ட 100 பேர் மீது கொரோனா பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ்,  கன்டோன்மென்ட்  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வாரத்தின் மூன்றாவது நாளாக இன்று காலை 10.40 மணி அளவில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திது பேசிய அமைச்சர் ஜெயகுமார் கூறியது, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக  வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற  கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கு தலைமை கழக நிர்வாகிகள், முக்கியமானவர்கள், வரும் பொழுது தொண்டர்கள் எழுச்சியுடன் வரவேற்பது வழக்கம் தான்.  நாங்கள் கட்டுப்பாடுகளோடு தான் நடந்து கொண்டோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி 10,000 பேரை கூடியபோது கொரோனா ஏற்படவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.


திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற போவதில்லை, அதுபோல் தான் தமிழக அரசின் பட்ஜெட் அல்வா கொடுக்கும் பட்ஜெட்  அதுவும் திருநெல்வேலி அல்வா ஆகும்.  திமுக அரசு , அதிமுக அரசின் திட்டங்கள் மீது  லேபிள் ஒட்டும் அரசாக  உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தமிழக ஆளுநர் நடவடிக்கை பற்றிய கேள்விக்கு, ஆளுநர் அதிகாரம் அரசியல் அமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது அதன்படி அவர் செயல்படுகிறார் என்றார்.