108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. பொதுவாக பெருமாள் கோவில்கள் அனைத்திலும் வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும்.


ஆனால் ஸ்ரீரங்கத்தில் இவ்விழா 20 நாள் விழாவாக நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்புள்ள 10 நாட்கள் பகல் பத்து என்றும், வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்கள் இராபத்து என்றும் அழைப்படுகிறது.திருச்சி, பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 23ஆம் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. ஜனவரி 1ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.




இதனை தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதனையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு நடக்கும். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் திருக்காட்சி தர உள்ளதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது.


ஜனவரி 8ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், 9ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11ஆம் தேதி தீர்த்தவாரியும், 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. இதனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்கதர்கள் வருகை வருவார்கள் என்பதால்  வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ( 02.01.2023)  திங்கள் கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஆயினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.01.2023  சனிக்கிழமை அன்று வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது என  திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.