திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்று வருகிறார்கள். அதே சமயம் உடனடியாக லஞ்சம் ஒழிப்புதுறை சார்ந்த அதிகாரிகள் அதிரடியாக கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அரசு துறையில் பணியாற்றும் யாராக இருந்தாலும் லஞ்சம் வாங்க கூடாது, சட்டவிதிகளை மீறி லஞ்சம் வாங்கினால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 2023ல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அஜிதாவின் மீதான அந்த வழக்கானது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதற்காகவும், மேலும் குண்டாஸ் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருப்பதற்காகவும், ரூபாய் 10000 ஆயிரம் லஞ்சமாக எஸ்.ஐ.ரமா கேட்டுள்ளார். அஜிதா தான் ஏற்கனவே தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும்,  தன்னால் தற்போது கடை நடத்த இயலாதாலும் தன்னால் பத்தாயிரம் தர முடியாது என்று கேட்டுக் கொண்டதன் பேரில், SI ரமா அட்வான்சாக ரூபாய் 3000 கொடுத்தால் மட்டுமே உனது வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

இதனை தொடர்ந்து  லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததின் பேரில் டிஎஸ்பி திரு மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார்  கொண்ட குழுவினரின் ஆலோசனையின் பேரில். அஜிதாவிடம் இருந்து எஸ்.ஐ. ரமா நேற்று காலை சுமார் 11.00 மணி அளவில் ரூ.3000 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.  எஸ்.ஐ. ரமா விபச்சார தடுப்பு பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

குறிப்பாக திருச்சி மாநகரத்தை பொருத்தவரையில் 60 ஸ்பா சென்டர்கள் இயங்கி வருகிறது என்றும் ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை SI ரமாவின் வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தொகையை ரமா, மாதா மாதம் லஞ்சமாக பெற்று தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். இதுகுறித்து  விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் எஸ்.ஐ. ரமா உயர் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்ற விபரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில் விபச்சார தடுப்பு பிரிவு SI ரமாவின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் இருக்கையில் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அப்பணம் பற்றி SI ராமாவிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின்னாக முரணான தகவல் கூறியதால் அந்த பணம் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்ற பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது.