தமிழகத்தில்  வனத்துறை தடைச்சட்டம் 1972-ஆம் ஆண்டின் படி, வீடுகளில் கிளிகள் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல வீடுகளில் கிளிகளை தங்களது வளர்ப்பு பறவைகளாக பலர் கூண்டுகளில் பாதுகாத்து வருகிறார்கள். இதைப்பயன்படுத்தி திருச்சி மாவட்டத்தில்  சிலர் காடுகளில் வளரக்கூடிய கிளிகளை வலை விரித்து பிடித்து அவற்றின் இறக்கைகளை வெட்டி அவற்றை சந்தைகளில் ஜோடி ரூ.250 வரையில் விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதனை தொடர்ந்து  திருச்சி மண்டல வனபாதுகாவலர் சதீஷ் உத்தரவின்பேரில்  மாவட்ட வன அதிகாரி கிரண் மேற்பார்வையில் திருச்சி கீழப்புதூர் குருவிக்காரன் தெருவில் உதவி வனபாதுகாவலர் என்.வி.நாகையா தலைமையில் திருச்சி வனச்சரகர் கோபிநாத் மற்றும் வனவர் பழனிசாமி உள்ளிட்ட வனத்துறையினர் வீடு வீடாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் விற்பனைக்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 600 கிளிகளையும், 300  குருவிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்




 


இந்த அதிரடி சோதனையில்  வீடுகளில் கூண்டுகளில் பச்சைக்கிளிகள், முனியாஸ் என்று சொல்லப்படும் தேன் சிட்டுப்போல உள்ள நெல்குருவிகள் வளர்த்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள வனத்துறை அலுலகத்திற்கு கொண்டு வந்தனர். முன்னதாக வனத்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்து கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வளர்த்த அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.


இதனை தொடர்ந்து பறிமுதல் செய்தவற்றில் 400 கிளி குஞ்சுகள், 200 வளர்ந்த கிளிகள் இருந்தன. மேலும் முனியாஸ் பறவைகள் 300-க்கும் மேற்பட்டவை இருந்தன.  நன்கு வளர்ந்த கிளிகள் காடுகளில் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன. சரியாக இறக்கை முளைக்காத கிளிகள் திருச்சியில் உள்ள கால்நடை பராமரிப்பு வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இறக்கை வளர்ந்ததும் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.




இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் என்.வி.நாகையா தெரிவிக்கையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி வீடுகளில் கிளிகள் வளர்ப்பது குற்றமாகும். ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சற்று பெரிய குற்றத்திற்கு சிறைத்தண்டனையும் கிடைக்கும். பொதுமக்கள் பலர் விழிப்புணர்வு இன்றி வீடுகளில் வளர்ப்பு பிராணிகள்போல கிளிகளை வளர்த்து வருகிறார்கள். அது தவறு, கிளிகளை சிலர் பிடித்து அவற்றை விற்பதை  தொழிலாக கொண்டுள்ளனர். அது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால்  தகவல் தெரிவிப்பவர் பெயர் ரகசியம் காக்கப்படும். மேலும் இதுபோன்று தவறான செயலில் ஈடுபடுவோரின் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.