திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 


செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது..


தமிழ்நாட்டில் யார் துணை முதல்வர் என்று கருத்துகள் பரவி வருகிறது. ஆனால் அண்ணா, பெரியார், கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவிற்கு உண்மையான தொண்டனாக இருப்பவர் மூத்த நிர்வாகி அனுபவங்கள் அதிகம் உள்ளவர் துரைமுருகன் ஆவார்.


ஆகையால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு, இடைக்கால முதலமைச்சராக துரைமுருகனை நியமிக்க வேண்டும். அதுதான் திமுக அவருக்கு செய்யும் மரியாதையாகும். 


தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பொது மேடைகளில் ஒருவரைப் பற்றி, மற்றொருவரை தரக்குறைவாக பேசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். 


எடப்பாடி பழனிசாமி அடிப்படை தொண்டனாக இருந்து கட்சியில் பதவிக்கு வந்துள்ளார். அவர் தற்போது உள்ளவர்களை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிசாமி புத்திசாலி தான். 




தமிழ்நாட்டிற்கு கார் பந்தயம் விளையாட்டு தேவையா - சீமான் ஆவேசம் 


கார் பந்தயம் என்பது தேவையற்ற செலவு, பல கோடிகள் செலவு செய்து தற்போது கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதன் மூலம் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் கிடைத்துள்ளது என்ற கேள்வி எழுப்பியுள்ளார். 


அதிமுக ஆட்சியில் இது போன்று தேவையற்ற எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மக்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளனர். 


கார்பந்தயம், சதுரங்க போட்டி உள்ளிட்ட பல்வேறு தேவையற்ற திட்டங்களில் திமுக அரசு பகல் கொள்ளை அடிக்கிறது. 


கடன் முறை சுற்று பயணத்தில் 10 லட்சம் கோடி முதலீடு செய்தோம்.  தமிழ்நாட்டில் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளோம் என்று பொய் பிரச்சாரத்தை திமுக அரசு செய்து வருகிறார்கள். இருந்தாலும் முதலமைச்சர் பயணம் சிறக்க வாழ்த்துகள் கூறினார். 


தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக அரசு பதிவு ஏற்றில் இருந்து மின்சார கட்டணம் மூன்று முறை உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுதான் இவர்கள் செய்த ஆட்சி ஆகும்.





தவெக - நாதக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியா?.. சீமான் சொன்னது என்ன?


தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். எங்கள் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று எங்களுடன் யார் இணைந்தாலும் நாங்கள் இணைந்து செயல்படுவோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் சமமாக அனைவருக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும். குறிப்பாக புதியோர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றார்.  


தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மற்றும் நானும் ஒரே நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளோம். 


அரசியலுக்கு வருவது எளிது அதை தக்க வைத்து தொடர்ந்து போராடி வெல்வது கடினம் என்று தம்பி விஜய் அவர்களுக்கு அறிவுரை ஏற்கனவே வழங்கி உள்ளேன்


தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி கூட்டணி குறித்து தேர்தல் வரும் நேரத்தில் தம்பி விஜய் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.