தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடலோர பகுதியில் நிலவுகிறது. இது வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விழுப்புரம், கடலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், வேலூர்  போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதியான இன்று பல மாவட்டங்களுக்கு ரெட், மஞ்சள் அலெர்ட்டுகளும் விடுக்கப்பட்டது. 




இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் கன மழை பெய்து வருவதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். மேலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால் திருச்சி  மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 4 மணி நேரத்தில் அதிகபட்சமாக லால்குடி பகுதியில்  12.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பொன்னியாறு பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டம் லால்குடி, மனப்பாறை, மருங்காபுரி, முசிறி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இருப்பினும் திருச்சி மாநகர் பகுதியில் மழை பெய்யவில்லை. நேற்று காலை முதல் திருச்சி மாநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் திருச்சி மாநகர பகுதிகளான சத்திரம் பேருந்துநிலையம், மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, உறையூர், பொன்மலை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 




இதேபோன்று தமிழகத்தில் கன மழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி உட்பட 23 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.